உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனமான பேபால் இந்தியாவில் பல வருடங்கள் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளை அளித்து வரும் நிலையில், இன்று இந்தியாவில் அளிக்கப்படும் உள்நாட்டுப் பேமெண்ட் சேவையை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பேபால் இந்திய வர்த்தகப் பிரிவு தனது உள்நாட்டுப் பேமெண்ட் சேவைகளை முழுமையாக நிறுத்திவிட்டு, முழுநேரமாக இந்தியர்களும், இந்திய நிறுவனங்களுக்குமான வெளிநாட்டுப் பேமெண்ட் சேவைகளில் இனி கவனத்தைச் செலுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பேபால் அமெரிக்கா நிறுவனம் என்றாலும், இந்தியாவில் சென்னை, பெங்களூரு, ஹைதரபாத் ஆகிய 3 நகரங்களில் தனது அலுவலகத்தை வைத்துக்கொண்டு இந்தியாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பேமெண்ட் சேவைகளை அளித்து வருகிறது.
பேபால் நிறுவனம் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய அலுவலகம் மற்றும் ஊழியர்களை வைத்து வர்த்தகம் செய்வது இந்தியாவில் தான்.
இந்தியாவில் உள்நாட்டுப் பேமெண்ட் சேவையை நிறுத்தினாலும், பேபால் தொடர்ந்து பிராடெக்ட் டெவலப்மெண்ட்-ல் தொடர்ந்து முதலீடு செய்யும் எனத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பேபால் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 350 மில்லியன் வரையில் உயர்வது மட்டும் அல்லாமல், சர்வதேச பணப் பரிமாற்ற வர்த்தகத்தில் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைய முடியும் என நம்புவதாக அறிவித்துள்ளது.
இந்திய வர்த்தகத்தில் மட்டும் 2020ஆம் ஆண்டில் சுமார் 3,60,000 வாடிக்கையாளர்களைக் கொண்டு சுமார் 1.4 பில்லியன் டாலர் மதிப்பிலான சர்வதேச பணப் பரிமாற்ற வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.