பெங்களூரு: இந்தியாவில் தற்போது பிக்கில் பால் விளையாட்டு (Pickleball) புகழ்பெற்று வருகிறது. கிரிக்கெட்டிற்கு எப்படி ஐபிஎல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகின்றனவோ அதே போல் பிக்கில் பாலுக்கும் அணிகள் உருவாக்கப்பட்டு World Pickleball League என்ற பெயரில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. தற்போது பல்வேறு பிரபலங்களின் பார்வை இந்த பிக்கில் பால் லீக் வசம் சென்றுள்ளது.
அண்மையில் தான் நடிகை சமந்தா மற்றும் ஸ்விக்கி நிறுவன உரிமையாளர்கள் பிக்கில் பால் அணிகளை விலை கொடுத்து வாங்கினர். அந்த வகையில் இயக்குனர் அட்லி பெங்களூரு மாநிலத்தின் பிக்கில் பால் குழுவை வாங்கி இருக்கிறார்.

அட்லியும் அவரது மனைவியும் இணைந்து பெங்களூரு ஜவான் என்ற பெயர் கொண்ட பெங்களூருவை சேர்ந்த பிக்கில் பால் அணியினை வாங்கியுள்ளனர். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் அட்லி பெங்களூரு நகரத்துடன் தங்களுக்கு ஒரு தனிப்பட்ட பிணைப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பெங்களூரு ஜவான் அணியில் இந்தியாவின் பிக்கில் பால் போட்டியில் சிறந்து விளங்கக்கூடிய விஷாலி தக்காரி இடம்பெற்றிருக்கிறார். அவரோடு பல்வேறு முன்னணி வீரர்களும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். பிப்ரவரி 24ஆம் தேதி உலக பிக்கில் பால் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. மொத்தம் ஆறு அணிகள் இந்த போட்டியில் பங்கேற்க இருக்கின்றன.
முன்னாள் இந்திய டென்னிஸ் வீரர்கள் கௌரவ நடேகர் மற்றும் அராட்டி பொன்னப்பா நடேகர் ஆகிய இருவர் இணைந்து உலக பிக்கில் பால் போட்டிகளை தொடங்கியுள்ளனர். நாடு முழுவதும் இருந்து 48 வீரர்கள் ஆறு அணிகளாக பிரிந்து இந்த போட்டிகளில் விளையாட இருக்கின்றனர். நவம்பர் மாதம் தான் ஸ்விக்கி நிறுவனம் மும்பையை சேர்ந்த பிக்கில் அணியினை விலை கொடுத்து வாங்கியது.
சென்னை , டெல்லி ,பெங்களூரு, ஹைதராபாத், புனே மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களை சேர்ந்த அணிகள் விளையாட இருக்கின்றன. இதில் சென்னை அணியின் உரிமையாளராக நடிகை சமந்தா இருக்கிறார். பிக்கில் பால் என்பது டென்னிஸ் ,பேட்மின்டன், டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளின் கலவையாகும். ஆனால் இவற்றின் விதி இந்த விளையாட்டுகளில் இருந்து மிகவும் மாறுபட்டது.
1965 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சியாட்டிலை சேர்ந்த சிலர் விடுமுறை காலத்தில் தங்கள் குழந்தைகள் விளையாடுவதற்காக இந்த விளையாட்டை உருவாக்கினர். அனைத்து வயதினரும் விளையாடக்கூடிய ஒரு விளையாட்டு என்பதால் இந்தியாவில் தற்போது இது வேகமாக பிரபலம் அடைந்து வருகிறது.
2028ஆம் ஆண்டில் இந்தியாவில் இந்த விளையாட்டில் பதிவு செய்யப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை 10 லட்சம் ஆக அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. தற்போது சுமார் ஒரு லட்சம் வீரர்கள் இந்த விளையாட்டில் பதிவு செய்யப்பட்ட வீரர்களாக இருக்கின்றனர்.
Story Written By: Devika


Click it and Unblock the Notifications