இந்தியாவின் மிகப்பெரிய பண்டிகையாக விளங்கும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் வேளையில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும், பண்டிகைக்காக ஆடைகள் முதல் தள்ளுபடியில் எலக்ட்ரானிக் பொருட்கள் முதல் கார், பைக் என வாங்க திட்டமிட்டு உள்ளனர்.
பொதுவாக இக்காலகட்டத்தில் வர்த்தகத்தை அதிகரிப்பதற்காகவே வர்த்தக நிறுவனங்கள் அதிகளவிலான தள்ளுபடிகளை அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்க்கும். ஆனால் இதில் பல ஏமாற்று வேலைகளும், ஆசை வார்த்தை காட்டி மக்களைக் கடன் விலையில் சிக்க வைக்கும் பணிகளும் நடக்கிறது.
குறிப்பாக ஈகாமர்ஸ் தளத்தில் இந்தத் தீபாவளி பண்டிகை காலத்தில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற வேண்டும் என்பதற்காக அதிக கேஷ்பேக் முதல் தள்ளுபடி, BNPL சேவை எனப் பலவற்றை அறிமுகம் செய்துள்ளது.
இந்நிலையில் இந்தத் தீபாவளி ஷாப்பிங் மோசடிகளில் சிக்கிக் கொள்ளாமலும், கடன் வலையில் சிக்காமலும் தப்பிப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்
பட்ஜெட் ரொம்ப முக்கியம்
பொதுவாகத் தேவை அறிந்தும், கையில் இருக்கும் பணத்தைப் புரிந்துகொண்டு சரியான முறையில் பட்ஜெட் போட்டாலே போதும் நாடும் சரி, வீடும் சரி சிறப்பாக இருக்கும்.
இந்த வகையில் மக்களின் பர்ஸை ஓட்டையாக்கும் தீபாவளி ஷாப்பிங்-ஐ துவங்கும் முன்பு பட்ஜெட் போட்டு துவங்குவது மிகவும் சரியாக இருக்கும். பொதுவாக ஒரு குடும்பத்தின் மாதத்தின் மொத்த வருமானத்தில் 5 சதவீதம் என்பது தான் பண்டிகை கால ஷாப்பிங்-கிற்குச் சரியான அளவீடு.
ஆனால் நீங்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று விரும்பினால் 10 சதவீதம் வரையில் செலவு செய்யலாம், ஆனால் இது உங்கள் சேமிப்பு மற்றும் இதர பணிகளைப் பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளவது உத்தமம்.
ஒப்பீடு செய்வது மிகவும் முக்கியம்
இந்தத் தீபாவளி பண்டிகையின் போது ஆன்லைன் விற்பனையாளர்களும் சரி, ஆப்லைன் விற்பனையாளர்களும் சரி அனைத்து பொருட்களுக்கும் அதிகளவிலான தள்ளுபடி, சலுகைகளை வாரி வழங்குகின்றனர்.
இதனால் நீங்கள் ஒரு பொருளை வாங்க விரும்பினால் உதாரணமாக டிவி என்று வைத்துக் கொள்வோம், ஆன்லைன் ஆர்டரில் தள்ளுபடி அனைத்தையும் தாண்டி செலுத்தப்படும் தொகையையும், ரீடைல் கடைகளில் செலுத்தப்படும் தொகையையும் ஒப்பிட்டு அதன் பின்பு வாங்குவதன் மூலம் அதிக லாபத்தை அடைய முடியும்.
இதேபோல் ஆடை என்றால் பல இடத்தில் தற்போது 2 வாங்கினால் 1 இலவசம் போன்ற பல ஆஃபர்கள் உள்ளது, இதோடு ஈகாமர்ஸ் சந்தையில் 500 ரூபாய் முதல் ஆடைகள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே சில நிமிடங்கள் சந்தை விலையை ஆய்வு செய்து பொருட்களை வாங்குவது மூலம் அதிக லாபத்தைப் பெற்ற முடியும்.
பேரம் பேசுங்க தப்பு இல்லை..
உங்களுக்கு இந்தப் பண்டிகை காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் செய்வது பிடிக்காது என்றால் ரீடைல் கடைகளில் ஷாப்பிங் செய்யும் போதும் பல நன்மைகள் உள்ளது.
பொதுவாக விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் போது நேரில் கடைகளுக்குச் சென்று பொருட்களின் தரத்தை ஆய்வு, ஒரு பிராண்டுக்கு பல பிராண்டு பொருட்களை ஒப்பீடு செய்து மன உறுதியாகப் பொருட்களை வாங்க முடியும்.
இதேபோல் பொருட்களின் விலையை ஆன்லைனில் ஒப்பிட்டுப் பேரம் பேச வாய்ப்பு கிடைக்கும், இதுமட்டும் அல்லாமல் கூடுதலாக வாரன்டி, கிப்ட் போன்றவையும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பேரம் பேசுவது தவறு என நீங்கள் நினைப்பது தவறு இல்லை, ஆனால் 'கடை'யின் உரிமையாளரும் பேரம் பேசி தான் பொருட்களை வாங்குவார். இதில் சில சதவீத சலுகையை நீங்கள் பேரம் பேசுவதில் இருந்து கிடைக்கும்.
ஜீரோ ஈஎம்ஐ
தற்போது ஆன்லைன் மற்றும் ஆப்லைன் சந்தையில் ஜீரோ ஈஎம்ஐ சேவை அளிக்கப்படுகிறது. எவ்விதமான கூடுதல் கட்டணமும் இல்லாமல் மாத தவணை அடிப்படையில் பொருட்களை வாங்கலாம். ஆனால் உண்மையில் அப்படியில்லை.
ஜீரோ ஈஎம்ஐ சேவை பலவற்றில் ரீடைல் நிறுவனங்கள் பிராசசிங் கட்டணத்தை வசூலிக்கிறது, சில வங்கிகளும் இந்த ஜீரோ ஈஎம்ஐ சேவைக்குப் பிராசசிங் கட்டணத்தை வசூலிக்கிறது. இது பொருட்களின் விலையை உண்மையில் உயர்த்துகிறது.
இதேபோல் ஜீரோ ஈஎம்ஐ சேவையைப் பயன்படுத்தும் போது உரிய நேரத்தில் பணத்தை முழுமையாகச் செலுத்த வேண்டும், இல்லையெனில் அபராதம் மட்டும் அல்லாமல் கிரெடிட் ஸ்கோரை பெரிய அளவில் பாதிக்கும்.
Buy Now, Pay Later வேண்டவே வேண்டாம்...
தற்போது பல பின்டெக் நிறுவனங்கள் Buy Now, Pay Later திட்டத்தின் கீழ் நீங்கள் வாங்கும் பொருட்களுக்குக் கடன் அளிக்கிறது, குறிப்பாக இந்தத் தீபாவளி பண்டிகையைக் குறிவைத்து சிறிதும் பெரிதுமாகப் பல நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க திட்டமிட்டு வருகிறது.
Buy Now, Pay Later திட்டத்தின் கீழ் ஒரு வாங்கும் பொருட்களுக்கான தொகை 14 முதல் 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இதில் செலுத்தப்படும் ஈஎம்ஐ-க்கு வட்டியுடன் சேர்த்துப் பணத்தைச் செலுத்த வேண்டும். பேமெண்ட்-ஐ உரிய நாளில் செலுத்தவில்லை எனில் அதிகப்படியான அபராதம் விதிக்கப்படுகிறது.
உதாரணமாக Flipkart Pay Later திட்டத்தில் தாமதமாகப் பணத்தைச் செலுத்தினால் 600 ரூபாய் அபராதம், பகுதி ஈஎம்ஐ தொகையை மட்டும் தெலுத்தினால் convenience feeஆக 475 ரூபாய். மீதமுள்ள தொகை அடுத்த மாத ஈஎம்ஐ உடன் சேர்க்கப்படும், அப்போது வட்டியும் உயரும்.
இப்படி முதல் முறையாக Buy Now, Pay Later திட்டம், ஜீரோ காஸ்ட் ஈஎம்ஐ பயன்படுத்தி முதல் முறையாகப் பொருட்களை வாங்குவோர் அதிகளவில் கடனில் சிக்கிக் கொள்கின்றனர்.
கோ பிராண்டெட் கிரெடிட் கார்டு
நீங்க கோ பிராண்டெட் கிரெடிட் கார்டு வைத்திருந்தால் இந்தத் தீபாவளி பண்டிகை காலத்தில் ஷாப்பிங் செய்யும் போது அதிக லாபம் உண்டு. கிரெடிட் கார்டு குறித்து உங்களுக்கு முழுமையாகத் தெரிந்துகொண்டு அதன் மூலம் ஷாப்பிங் செய்யும் போது கோ பிராண்டெட் கிரெடிட் கார்டு லாபமாக இருக்கும். இதிலும் வட்டி, அபராதம் கட்டணம் போண்ற அனைத்தும் உள்ளது.
நீங்கள் அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளத்தில் அடிக்கடி ஷாப்பிங் செய்பவராக இருந்தால் இந்நிறுவனங்கள் கொடுக்கும் கோ பிராண்டெட் கிரெடிட் கார்டு மூலம் அதிகப் பலன் பெறலாம்.