நாட்டின் மிகப்பெரிய பில்லியனர்களில் ஒருவரான ராதாகிஷன் தமனி, சிறந்த தொழிலதிபர் மட்டும் அல்ல, சிறந்த முதலீட்டாளரும் கூட. டிமார்ட் நிறுவனத்தின் தலைவரான இவர் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் தனது பங்கினை அதிகரித்துள்ளார்.
சமீப காலமாக சிமெண்ட் நிறுவனங்களில் முதலீடுகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் கட்ட பரவலானது குறைந்து, தொழிற்துறையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில் உள்கட்டமைப்பு துறையில் முதலீடுகள் பெருகி வருகின்றன.
சில தினங்களுக்கு முன்பு கூட, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, ஜே எஸ் டபள்யூ சிமெண்டில் 100 கோடி ரூபாய் முதலீடு செய்தது. இந்த நிலையில் பில்லியனரும் முதலீட்டாளருமான ராதாகிஷன் தமனியின் அறிவிப்பும் வந்துள்ளது.
வளர்ச்சி பாதை
இது உள்கட்டமைப்பு துறையானது வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், சிமெண்ட்டின் தேவையானது இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் உள்கட்டமைப்பு துறை சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சி விகிதமானது மீண்டும் உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீடு அதிகரிப்பு
இதற்கிடையில் தான் சிமெண்ட் நிறுவனங்களில் சமீபத்திய வாரங்களாக முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. ராதாகிஷன் தமனி, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் தன்னிடம் உள்ள 21.14 சதவீத பங்கினை, 22.76 சதவீதம் அளவுக்கு உயர்த்தியுள்ளார். இந்த பங்கு அதிகரிப்பானது செப்டம்பர் காலாண்டில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எதிர்பார்ப்பு
கடந்த ஆண்டில் இருந்தே தமனி இந்த பங்கில் தொடர்ந்து முதலீடுகளை அதிகரித்து வரும் நிலையில், இது இந்த நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் பற்றிய நல்லதொரு எதிர்பார்ப்பு உள்ளது எனலாம். மார்ச் 2020 காலாண்டில் இவரின் வசம் 19.89 சதவீதம் பங்கும், இதே ஜூலை காலாண்டில் 20.4 சதவீத பங்கும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் காலாண்டில் அதிகரிப்பு
இதே நடப்பு ஆண்டில் ஜனவரி மாதத்தில் தமனி தனது பங்கினை 21.14 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில் 11 மாதங்களாக இந்த முதலீட்டினை அப்படியே தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் செப்டம்பர் காலாண்டில் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. எனினும் இந்தியா சிமெண்ட்ஸ் தரப்பில் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
லாபம் சரிவு
இதற்கிடையில் செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகரலாபம் சற்று குறைந்துள்ளது. இது வரிக்கு பின்பு 30 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 57% குறைவாகும். எனினும் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் வருவாய் விகிதமானது 13% மேம்பட்டு, 1325 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இன்றைய பங்கு விலை நிலவரம்?
இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது என் எஸி-ல் 5.12% அதிகரித்து, 185.70 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்ச விலை 194.40 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை இதுவரையில் 182.05 ரூபாயாகும்.
இதே பிஎஸ்இ-ல் 5.12% அதிகரித்து, 185.65 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்சம் 192.35 ரூபாயாகவும் ,குறைந்தபட்ச விலை 182.90 ரூபாயாகும். இன்றைய 52 வார உச்ச விலை 235.05 ரூபாயாகும். 52 வார குறைந்தபட்ச விலை 134.05 ரூபாயாகும்.