இந்தியாவின் முன்னணி ரீடைல் விற்பனை நிறுவனமான டிமார்ட் கடைகளின் தாய் நிறுவனமான ஆவென்யூ சூப்பர்மார்ட்ஸ் பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 6 நாட்களில் மட்டும் சுமார் 20 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இந்திய ரீடைல் சந்தையில் அமேசான், ஜியோமார்ட் உடன் போட்டி போட்டு வரும் டிமார்ட் தொடர்ந்து அதிகளவிலான வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் பெற்று வருகிறது.
டிமார்ட் பங்குகள்
புதன்கிழமை வர்த்தகத்தில் டிமார்ட் பங்குகள் 1.7 சதவீதம் அதிகரித்துத் தனது 52 வார உயர்வான விலையை அடைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் பங்குகள் 2,755 ரூபாய் என்ற புதிய உச்சத்தை அடைந்து நிலையில் வர்த்தக முடிவில் 1 சதவீதம் வரையில் சரிந்து 2,615 ரூபாய் வரையில் சரிந்தது.
ஓரே நாளில் 52 வார உயர்வை அடைந்த அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் பங்குகள் சரிவைத் தழுவியுள்ளது.
தொடர் வளர்ச்சி
நவம்பர் 27ஆம் தேதி முதல் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் பங்குகள் சுமார் 20.16 சதவீத வளர்ச்சியை அடைந்து, புதிய உச்ச விலையான 2,755 ரூபாயை அடைந்தது. இதுமட்டும் அல்லாமல் நடப்பு ஆண்டில் மட்டும் டிமார்ட் கடைகளின் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் பங்குகள் 47 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து
பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்குச் செலுத்தப்பட்டு வரும் நிலையில் இந்தியாவிற்கு அடுத்தச் சில வாரத்தில் கொரோனா தடுப்பு மருந்து வரும் என அதிகளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தடுப்பு மருந்து வந்தால் டிமார்ட் போன்ற கடைகளுக்கு வாடிக்கையாளர்களின் வருகை எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் கடந்த ஒரு வாரமாக இந்நிறுவனப் பங்குகள் வளர்ச்சி அடைந்து வருகிறது.
ஆன்லைன் வர்த்தகச் சந்தை
இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகச் சந்தை கடந்த ஒரு வருடத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. உணவு டெலிவரி, பேமெண்ட், ஷாப்பிங் துறையில் மட்டுமே டிஜிட்டல் சேவைகள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் லாக்டவுன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ள காரணத்தால் இந்தியாவில் ஆன்லைன் சேவையின் ஆதிக்கம் மற்றும் ஆன்லைன் சேவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
ஜியோமார்ட் உடன் போட்டி
இதன் வாயிலாக இந்தியாவில் எப்போதும் இல்லாத வகையில் ஆன்லைன் மளிகை பொருட்களின் விற்பனை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. ஜியோமார்ட்-க்குப் போட்டியாகத் தற்போது அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனமும் தற்போது ஆன்லைன் சேவையில் இறங்கி அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற துவங்கியுள்ளது.
மும்பையில் பிரத்தியேகமாக இரு கிளைகளை ஆன்லைன் டெலிவரிக்காக மறுசீரமைப்பு செய்துள்ளது டிமார்ட்.