இந்தியப் பொருளாதாரம் மோசமாக இருப்பதற்கு, அரசிடம் இருக்கும் ஒரு மிக முக்கிய சாட்சி, அரசுக்கு வரும் வரி வருவாய்கள் சரிந்து கொண்டே இருப்பது தான். இந்த 2019 - 20 நிதி ஆண்டின் பல மாதங்களில் ஜிஎஸ்டி வரி வருவாய், நிர்ணயித்த இலக்கு அளவுக்கு வரவில்லை.
அதோடு நேரடி வரி வருவாய்களும் எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்கவில்லை. எனவே அரசு, தன் திட்டங்களைச் செயல்படுத்த போதுமான பணம் இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கிறது.
இந்த பிரச்னையை சரி செய்ய, மீண்டும் தன் பழைய ஐடியாவை தூசி தட்டி கையில் எடுத்து இருக்கிறது. அது தான் ஆர்பிஐ இடம் இருந்து பணம் வாங்குவது.
ஏற்கனவே 1.76 லட்சம் கோடி
இந்த 2019 - 20 நிதி ஆண்டில், கடந்த ஆகஸ்ட் 2019-ல் தான் 1.76 லட்சம் கோடி ரூபாயை, மத்திய அரசுக்கு கொடுக்க ஒப்புக் கொண்டது ஆர்பிஐ. இந்த 1.76 லட்சம் கோடி ரூபாயில் 1.23 லட்சம் கோடி ரூபாய் ஈவுத் தொகை (Dividend) + 52,637 கோடி ரூபாய் உபரி முதல் (Surplus Capital) எனப் பிரித்துக் கொடுத்தார்கள்.
என்ன செய்தார்கள்
ஆர்பிஐ தன்னிடம் இருந்த, பணத்தில் ஒரு பகுதியை அரசுக்காக எடுத்துக் கொடுத்ததையே பல பொருளாதார வல்லுநர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் கடுமையாக எதிர்த்தார்கள். ஆனால் இப்போது, மீண்டும், மத்திய அரசுக்கு பணம் கொடுக்கச் சொல்லி, மத்திய ரிசர்வ் வங்கியிடம் கேட்டுக் கொண்டு இருப்பதாக விஷயம் தெரிந்த நபர்கள் எகனாமிக் டைம்ஸ் பத்திரிகைக்குச் சொல்லி இருக்கிறார்கள்.
ஆர்பிஐ லாபம்
மத்திய ரிசர்வ் வங்கிக்கு, கரன்ஸி வியாபாரம் மற்றும் அரசு கடன் பத்திரங்கள் வழியாகத் தான் வருமானம் வந்து கொண்டு இருக்கிறது. இந்த வருமானத்தில் ஒரு பகுதியை, ஆர்பிஐ தன் அவசர காலத் தேவைக்கு ஒதுக்கி வைத்து விடுவார்கள். இரண்டாவது பகுதியை தன் அன்றாட செலவுகளுக்கு வைத்துக் கொள்வார்கள்.
மத்திய அரசுக்கு வருமானம்
மீதம் உள்ள ஒரு பகுதியைத் தான், மத்திய அரசுக்கு ஈவுத் தொகையாக (Dividend) தருவார்கள். இந்த 2019 - 20 நிதி ஆண்டில் 1.23 லட்சம் கோடி ரூபாயை ஏற்கனவே கொடுத்து விட்டார்கள். இது கடந்த நிதி ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது மிகப் பெரிய தொகை. ஆனால் அரசுக்கு இந்த தொகை போதவில்லை போல.
அவசரத்த புரிஞ்சுக்கங்க
இந்த 2019 - 20 நிதி ஆண்டை, ஒரு விதி விலக்கான ஆண்டாக கணக்கில் எடுத்துக் கொண்டு, மத்திய ரிசர்வ் வங்கி ஒரு இடைக்கால ஈவுத் தொகையை (Interim Dividend), மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும் என அரசு தரப்பில் கேட்டுக் கொண்டு இருக்கிறார்களாம். இந்த முறையும் இடைக்கால ஈவுத் தொகை கொடுக்கப்பட்டால், ஆர்பிஐ மத்திய அரசுக்கு இடைக்கால ஈவுத் தொகை வழங்குவது தொடர்ந்து 3 ஆண்டாக இருக்கும். சரி ஏன் இந்த ஆண்டு விதி விலக்கு..?
காரணம்
இந்த 2019 - 20 நிதி ஆண்டில், இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி சுமாராக 05 சதவிகிதம் வரை இருக்கலாம் என பலரும் தங்கள் கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். இது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரிய சரிவு. எனவே மத்திய ரிசர்வ் வங்கி, இந்த அவசர காலத்தில், அரசுக்கு உதவ வேண்டும் என்கிறார்களாம்.
எவ்வளவு பணம்
மத்திய அரசின் அதிகாரிகள் வட்டாரத்தில், மத்திய அரசு, மத்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து சுமாராக 35,000 - 45,000 கோடி ரூபாய் வரை இடைக்கால ஈவுத் தொகையாகக் கேட்க இருப்பதாக, எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த செய்தியைக் குறித்து ஆர்பிஐ மற்றும் நிதி அமைச்சகத்திடம் கருத்து கேட்ட போது, இரு தரப்புமே கருத்து சொல்லவில்லை.
பிமல் ஜலான் கமிட்டி
ஆர்பிஐ, மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் கொடுப்பதற்கு முன், 2018-ம் ஆண்டில், முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் பரிந்துரையின் பெயரில் தான் ஆர்பிஐ 1.76 லட்சம் கோடி ரூபாயைக் கொடுத்தார்கள். அந்த கமிட்டியின் பரிந்துரையில், "அசாதாரண சூழல் நிலவினால் இடைக்கால ஈவுத் தொகை கொடுக்கலாம்" என சொல்லப்பட்டு இருக்கிறதாம். எனவே இந்த வரியை கெட்டியாக பிடித்துக் கொண்டு, இடைக்கால ஈவுத் தொகையை கேட்டுக் கொண்டு இருக்கிறது மத்திய அரசு.
25 சதவிகிதம் கட்
மத்திய அரசின் வரி வருவாய், நிர்ணயித்த இலக்கை விட 34 - 37 சதவிகிதம் குறைவாகத் தான் வசூலாகி இருக்கிறதாம். இருக்கும் எல்லாம் வழிகளில் வருவாயை அதிகரித்தால் கூட, இந்த நிதி ஆண்டு முடிவுக்குள், நிர்ணயித்த இலக்கில் 25 சதவிகித வரி வருவாயை வசூலிக்க முடியாமல் போகலாம் என்கிறார்கள்.
ஆர்பிஐ தரப்பு
இப்படி மத்திய அரசு கேட்கிறது என்பதற்காக, மத்திய ரிசர்வ் வங்கி, வாரி வழங்கிக் கொண்டு இருந்தால், நாளை மத்திய ரிசர்வ் வங்கி சிக்கலில் மாட்டிக் கொள்ளும் என, ஆர்பிஐ அதிகாரிகள் சொல்கிறார்களாம். ஆனால் மத்திய அரசோ, தான் நியமித்த இயக்குநர்கள், ஆர்பிஐ இயக்குநர் குழுவில் இருப்பதால், எப்படியும் ஆர்பிஐ இடம் இருந்து பணம் வரும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்களாம்.
போகிற போக்கைப் பார்த்தால், மற்ற வங்கிகளை திவாலாக்குவதற்கு முன், ஆர்பிஐ வங்கியையே திவால் ஆக்கிவிடுவார்கள் போல் இருக்கிறதே.