இந்தியர்களின் 13 லட்சம் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த திருடப்பட்ட தகவல்கள் கள்ள மார்கெட்டில் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், இந்த திருட்டு தகவல்கள் மூலம் உங்களின் கார்டுகளின் விபரங்களை திருடுவதாகவும், இதன் மூலம் போலி கார்டுகள் உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதன் மூலம் உங்களின் பணத்தையும் திருட முடியும் என்றும் கூறப்படுகிறது.
மிகப் பெரிய திருட்டு
இந்தியாவில் கண்டிராத அளவு மிகப்பெரிய திருட்டு என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு திருட்டு தனமாக திருடப்படும் தகவல்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், இதன் மொத்த மதிப்பு 920 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. இதில் அதிர்ச்சியூட்டும் செய்தி என்னவெனில், இந்த ஹேக் செய்யப்பட்ட அட்டைகளில் 18 சதவிகிதம் ஒரே வங்கியை சேர்ந்தது என்பது தான்.
அதிகம் இந்தியர்களின் தகவல்கள் தான் திருட்டு
இதை சிங்கப்பூரை சேர்ந்த குரூப் - ஐபி என்ற பாதுகாப்பு ஆராய்ச்சி குழு (Group-IB security research team) இந்த பெரிய திருட்டினை பற்றியும், இதன் மூலம் திருடப்படும் தகவல்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை பற்றியும் வெளிபடுத்தியுள்ளது. மேலும் இதில் இன்னொரு அதிர்ச்சிகரமான சம்பவம் என்னவெனில் இவர்கள் ஹேக் செய்யப்பட்டதாக சொல்லும் மொத்த தகவல்களில் 98 சதவிகிதம் இந்தியர்களின் தகவல்கள் தானாம்.
தகவல் தரவுகள் விற்பனை
குறிப்பாக 18 சதவிகித தகவல்கள் ஒரே வங்கியைச் சர்ந்தது என்றும் தெரிவித்துள்ளது அந்த சிங்கப்பூர் ஆராய்ச்சி நிறுவனம். எனினும் அது எந்த வங்கி, எவ்வளவு பணம் என்பது போன்ற தகவல்களை அந்த ஆராய்ச்சி நிறுவனம் வெளியிடவில்லை. இதில் கொடுமை என்னவெனில் இவ்வாறு திருடப்படும் ஒவ்வொரு தகவலும், அதாவது ஒவ்வொரு அட்டைக்கும் 100 டாலர் வரையில் (இந்திய மதிப்பில் 7000 ரூபாய்க்கு) விற்கப்படுவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்னென்ன தகவல்கள் திருட்டு?
இவ்வாறு சட்டவிரோதமாக விற்கப்பட்ட தரவுகளின் மதிப்பு சுமார் 920 கோடி ரூபாயை தொட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இவ்வாறு விற்கப்படும் தரவுகளில் அட்டை எண், சிவிவி எண், இதன் காலாவதி தேதி, கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்கள் உள்ளிட்ட பல தகவல்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
எப்படி வேண்டுமானலும் பயன்படுத்தலாம்
மேலும் இது குறித்த தகவலை குரூப் - ஐபி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனறுமான, இலியா சச்கோவ் கூறுகையில், இது ஒரே நேரத்தில் பதிவேற்றப்பட்ட இணைக்கப்பட்ட மிகப்பெரிய தரவு தளம் என்றும் கூறியுள்ளார். மேலும் இவ்வாறு கள்ளச் சந்தையில் விற்கப்படும் தகவல்கள் மிக அரிதானது. ஏனெனில் இது பயனாளர்களின் முழு தகவல்களையும் கொண்டுள்ளது. மேலும் இந்த தகவல்களை எந்த வகையிலும் பயன்படுத்தலாம் என்றும் இலியா கூறியுள்ளார்.
எப்படி இந்த திருட்டு நடக்கிறது
சரி எப்படி இவர்கள் நம் தகவல்களை திருடுகிறார்கள் என்று கேட்கிறீர்களா? ஏடிஎம்களில் உள்ள ஹேக்கர்கள், ஸ்கிம்மர்கள் மூலமாகவோ அல்லது பயனாளர்கள் தங்களது அட்டைகளை ஸ்வைப் செய்தல், போஸ் இயந்திரங்களில் இருந்து உங்களது தகவல்களை போஸ் இயந்திரங்கள் மூலம் திருடும் முயற்சிகளும் (PoS machines) நடை பெறுகின்றன.
மக்கள் எச்சரிக்கையா இருங்க?
ஆக மக்களே எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டில் ஏதேனும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதா இல்லை? என்பதைக் கவனிக்கவும். அப்படி ஏதேனும் நடந்திருந்தால் முதலில் உங்கள் வங்கி அதிகாரிகளை சந்திக்கவும் என்றும் எச்சரித்துள்ளது அந்த ஆராய்ச்சி நிறுவனம்.