இந்தியாவின் டாப் 500 நிறுவனங்களின் மொத்த ஊழியர்களின் சம்பள தொகையின் அளவு 2022 ஆம் ஆண்டில் 10.8 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது கடந்த எட்டு ஆண்டுகளில் அதிகப்படியான தொகை என்பது மட்டும் அல்லாமல், 10 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) பட்டியலிடப்பட்ட முதல் 500 நிறுவனப் பங்குகளின் செயல்திறனைக் குறிக்கும் குறியீடான நிஃப்டி 500-ன் மொத்த ஊழியர் செலவு கடந்த ஓராண்டில் ₹1.2 லட்சம் கோடி உயர்ந்துள்ளது என மோதிலால் ஓஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
500 நிறுவனங்கள்
இதேபோல் மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் இந்த அறிக்கையில் 500 நிறுவனங்களுக்குப் பதிலாக 470 நிறுவனங்களின் தரவுகளை மட்டுமே கணக்கில் கொண்டு உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் 470 நிறுவனங்களில் மட்டுமே கடந்த 10 வருடத்திற்கான சம்பள செலவுகளுக்கான டேட்டா உள்ளது.
10.8 லட்சம் கோடி
இந்தியாவின் டாப் 500 நிறுவனங்களில் 470 நிறுவனங்களின் ஊழியர்களின் மொத்த சம்பள தொகை 2022 ஆம் ஆண்டில் 1.2 லட்சம் கோடி அதிகரித்து வரலாற்றில் முதல் முறையாக 10.8 லட்சம் கோடி ரூபாயை முதல் முறை தொட்ட நிலையில், இதில் பாதித் தொகை தொழில்நுட்ப துறை மட்டுமே பதிவு செய்துள்ளது.
தொழில்நுட்பத் துறை
டாப் 500 நிறுவனங்களின் மொத்த செலவீட்டில் தொழில்நுட்பத் துறை பாதி அதாவது சுமார் 552 கோடி ரூபாயை சம்பளமாகத் தனது ஊழியர்களுக்கு அளிக்கப்படுகிறது. தொழில்நுட்ப துறையில் ஊழியர்களுக்கான டிமாண்ட் அதிகமாக இருக்கும் வேளையில் இத்துறை ஊழியர்களின் சம்பளம் அதிகமாக உள்ளது.
NBFC ஊழியர்கள்
ஆனால் உண்மையில் அதிகப்படியான சம்பளத்தை வாங்குவது டெக் ஊழியர்கள் இல்லையாம். 2022ஆம் ஆண்டில் எந்தத் துறை ஊழியர்களுக்கு அதிகப்படியான சம்பளத்தில் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளது எனப் பார்க்கும் போது NBFC ஊழியர்கள் தான் சராசரியாக 22 சதவீத சம்பள உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
பிற துறைகள்
NBFC துறையைத் தொடர்ந்து டெக்னாலஜி துறையில் 19 சதவீதமும், மெட்டல் துறையில் 16 சதவீதமும், தனியார் வங்கிகளில் 15 சதவீதமும், கேப்பிடல் கூட்ஸ் துறையில் 15 சதவீதம், யூட்டிலிட்டி துறை 4 சதவீதம், டெலிகாம் துறையில் 3 சதவீதம் சம்பளத்தில் செலவுகள் அதிகரித்துள்ளது.