இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு வீடு அல்லது ஒரு சொத்தினை நீங்கள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்துகிறீர்கள் என்றால் அந்த உரிமையாளரிடம் நீங்கள் சட்டப்படி வாடகை ஒப்பந்தம் மேற்கொள்வது அவசியமாகும்.
இந்த வாடகை ஒப்பந்தம் இருதரப்பிலும் உள்ள அனைத்து நிபந்தனைகளும் இடம்பெற்ற ஒரு சட்டப்பூர்வ ஆவணமாக கருதப்படுகிறது.

பொதுவாக வாடகை ஒப்பந்தங்கள் நான்கு வகையில் போடப்படுகின்றன. 1. வணிக நோக்கத்துக்காக மேற்கொள்ளப்படும் வாடகை ஒப்பந்தம் , 2. குடியிருப்புகள் 3.தனிப்பட்ட ஒரு அறை , 4. ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஓரிடத்தை பகிர்ந்து பயன்படுத்துவது. இந்த நான்கு வகைகளில் வாடகை ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
ஆனால் பொதுவாக இந்த மாதிரியான வாடகை ஒப்பந்தங்களின் காலம் என்பது 11 மாதங்கள் மட்டுமே. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நமது அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 17 பதிவு சட்டம் 1918-இன் படி வாடகை ஒப்பந்தத்தின் காலம் என்பது ஓராண்டுக்கு கீழ் இருந்தால் அதனை பதிவு செய்ய தேவையில்லை. எனவே தான் பொதுவாக இது போன்ற வாடகை ஒப்பந்தங்கள் 11 மாதங்கள் மற்றும் அதற்கு குறைவான காலத்திற்கு மட்டுமே போடப்படுகின்றன. இதனை பதிவு செய்ய இரு தரப்பினரும் அலைய வேண்டிய தேவை இருக்காது.
குறிப்பாக வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்வதற்கான பதிவு கட்டணம் நாம் செலவிட வேண்டிய தேவையில்லை. நீண்ட கால அடிப்படையில் நீங்கள் ஒப்பந்தம் போடும்போது அதற்கான பதிவு கட்டணம் அதிகமாக இருக்கும்.
இதுபோல 11 மாத காலத்திற்கு மட்டுமே ஒப்பந்தங்களை போடும்போது உரிமையாளர்களுக்கு அது சாதகமாக உள்ளது. குறிப்பாக வாடகை உயர்வு மற்றும் வாடகை காலத்தை முடிவுக்கு கொண்டு வருவது ஆகியவற்றுக்கான சுதந்திரம் உரிமையாளர்களுக்கு கிடைக்கிறது. மறுபுறம் வாடகைக்கு குடியிருப்பவர்கள் முத்திரை வரி அல்லது பதிவு செலவுகளை செய்ய வேண்டிய தேவை இருக்காது.
ஆனால் நீண்ட கால அடிப்படையில் ஒரு இடத்தை வாடகைக்கு பயன்படுத்தப் போகிறீர்கள் எனில் ஒப்பந்தம் செய்து அதனை முறையாக பதிவு செய்வது இரு தரப்புக்குமே நல்லது என்கின்றனர் வழக்கறிஞர்கள். இந்தியாவில் வாடகை ஒப்பந்தம் உரிமையாளருக்கும், வாடகைக்கு வருபவருக்கும் சட்ட ரீதியான பாதுகாப்பை தரக் கூடியது.
ஒப்பந்தமானது வாடகைக்கு குடியிருப்பவர் மற்றும் உரிமையாளர் ஆகிய இரு தரப்பும் பரஸ்பரம் ஒப்புக் கொண்ட விஷயங்களை மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என்கின்றனர்.
வாடகைக்கு குடியிருப்பவர் வீட்டின் மீது உரிமை கொண்டாடாமல் இருக்க, வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்வது முக்கியம். அதே போல வீட்டை காலி செய்வது பற்றி எத்தனை நாட்களுக்கு முன் கூற வேண்டும் என்பது கட்டாயம் இடம்பெற வேண்டும் என்கின்றனர் வழக்கறிஞர்கள்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications