இந்திய ரீடைல் சந்தையில் நடக்கும் மோசமான போட்டி நிலையின் காரணமாக நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்கள் போட்டிப்போட்டு தள்ளுபடி விற்பனை, ஆஃபர்கள் என அள்ளி வீசி வருகிறது. கொரோனா பாதிப்பால் மக்கள் பொருட்களை வாங்க வெளியில் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் காரணத்தால் மக்களும் ஆஃபர்களுக்கு மயங்கி பொருட்களை அதிகளவிலான ஆர்டர்களைச் செய்து வருகின்றனர்.
சொல்லப்போனால் இந்த வருடம் தீபாவளி பண்டிகை வர்த்தகத்தில் அதிகளவில் வர்த்தகம் மற்றும் லாபத்தைப் பெறப் போவது ஈகாமர்ஸ் தளங்கள் தான் என்பது வெளிப்படையான உண்மையாக உள்ளது. இந்தப் பண்டிகை கால விற்பனையில் மட்டும் இந்திய ஈகாமர்ஸ் நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சுமார் 70 சதவீதம் அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகிறது.
இந்நிலையில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் தள்ளுபடி பெயரில் மக்களை ஏமாற்றி அதே விலைக்கு விற்பனை செய்து வருவதாக முன்னணி ஈகாமர்ஸ் ஆய்வு தளம் தெரிவித்துள்ளது.
தள்ளுபடி விற்பனை
தற்போது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய 2 முன்னணி ஈகாரமஸ் தளத்திலுமே தள்ளுபடி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த விற்பனையில் சாதாரண நாட்களை விடவும் இந்தச் சிறப்புத் தள்ளுபடி விற்பனை நாட்களில் அதிக விலைக்குப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக Dataweave தெரிவித்துள்ளது.
இதன் படி அமேசான் தளத்தில் சுமார் 16 சதவீத பொருட்களும், வால்மார்ட் கட்டுப்பாட்டில் இருக்கும் பிளிப்கார்ட் தளத்தில் 6 சதவீத பொருட்கள் சாதாரண நாட்களை விடவும் சிறப்புத் தள்ளுபடி விற்பனை காலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாகத் தெரிவித்துள்ளது இந்த Dataweave நிறுவனம்.
ஆய்வு
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு 10 வருடமாக இயங்கி வரும் Dataweave நிறுவனம் பேஷன், எலக்ட்ரானிக்ஸ், மளிகை பொருட்கள், குழந்தை பொருட்கள், மற்றும் பர்சனல் கேர் பிரிவில் டாப் 500 பொருட்களின் விலை இவ்விரு ஈகாமர்ஸ் தளத்தில் ஆய்வு செய்து இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.
செலவுகள் அதிகரிப்பு
இந்தக் கொரோனா காலத்தில் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் அதிகளவில் வர்த்தகத்தை இழந்தது மட்டும் அல்லாமல் இக்காலகட்டத்தில் செயலாக்கக் கட்டணம் மற்றும் செலவுகள் அனைத்தும் பல மடங்கு உயர்ந்துள்ளது.
இது ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சுமையாக இருக்கும் நிலையில் பொருட்களை இயல்பான நாட்களை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்து செலவை ஈடுகட்டுகிறதா எனக் கேள்வியும் எழுகிறது.
விலை மாற்றம்
பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய வர்த்தகத் தளங்களை விலையை அதிகப்படுத்தி விற்பனை செய்யப்பட்டதைப் போல், சுமார் 4,442 பொருட்களின் விலை தள்ளுபடி என அறிவித்தும் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்துள்ளது. இதில் பிளிப்கார்ட் 1,706 பொருட்களையும், அமேசான் 2,736 பொருட்களையும் விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்துள்ளது.
அமேசான்
மேலும் இந்த ஆய்வில் அமேசான் தனது ஈகாமர்ஸ் தளத்தில் வெறும் 26 சதவீத பொருட்களுக்கு மட்டுமே தள்ளுபடியைக் கொடுத்துள்ளது, இதேபோல் தள்ளுபடி கொடுக்கப்பட்ட பொருட்களுக்குச் சராசரியாக 13.2 சதவீத தள்ளுபடி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்த அளவிலான தள்ளுபடி 7.2 சதவீதம்.
பிளிப்கார்ட்
இதேபோல் பிளிப்கார்ட் தனது ஈகாமர்ஸ் தளத்தில் சுமார் 54 சதவீத பொருட்களுக்குத் தள்ளுபடியைக் கொடுத்துள்ளது, இதேபோல் தள்ளுபடி கொடுக்கப்பட்ட பொருட்களுக்குச் சராசரியாக 15.2 சதவீத தள்ளுபடியை மட்டுமே தனது வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்துள்ளது பிளிப்கார்ட். இதில் அதிகளவிலான தள்ளுபடி 24.7 சதவீதம்.
ஜியோமார்ட்
Dataweave ஆய்வில் பிளிப்கார்ட், அமேசான் மட்டுமே இடம்பெற்றுள்ள நிலையில், இந்தியாவில் புதிதாக அறிமுகமாகி வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஜியோமார்ட் ஏன் இடம்பெறவில்லை என்பது தெரியவில்லை.
இந்த ஆய்வில் ஜியோமார்ட் இடம்பெற்று இருந்தால் எந்த ஈகாமர்ஸ் தளம் சிறப்பானது எனத் தெரிந்திருக்கும்.