சென்னை: அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக மோதல்கள் இந்தியாவிற்கு பெரிய அளவில் சாதகமாக அமைந்தன. அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய ஐபோன் உற்பத்தி மையமாக சீனாவை தான் வைத்திருந்தது. ஆனால் அடிக்கடி நிகழக்கூடிய இந்த வர்த்தக மோதல்கள் காரணமாக ஐபோன் மற்றும் தங்களுடைய சாதனங்களின் உற்பத்திக்கு சீனாவை மட்டுமே நம்பி இருக்காமல் உற்பத்தியை மற்ற நாடுகளுக்கும் பரவலாக்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்தது.
ஐபோன் உற்பத்தி : ஆப்பிள் நிறுவனத்தின் சீனாவிற்கு அடுத்த வாய்ப்பாக தெரிந்தது இந்தியா தான். இந்தியாவில் பாக்ஸ்கான் மற்றும் டாடா நிறுவனங்கள் ஐபோன் உற்பத்தி ஆலைகளை அமைத்து ஐபோன்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கின்றன. இந்த இரண்டு நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தான் ஆலைகளை அமைத்திருக்கின்றன என்பது மற்றொரு சிறப்பு.

பாக்ஸ்கான் நிறுவனம்: பாக்ஸ்கான் நிறுவனம் தான் இந்தியாவில் முதலில் ஐபோன் உற்பத்தியை தொடங்கியது. உலகின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி நிறுவனம் பாக்ஸ்கான். இந்த நிறுவனம் ஸ்மார்ட் ஃபோன்கள் மட்டும் இல்லாமல் நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் டிவி உட்பட பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய ஒப்பந்ததாரர் பாக்ஸ்கான் நிறுவனம் தான்.
ஐபோன் உற்பத்தி எப்படி சாத்தியமானது: இந்த பாக்ஸ்கான் நிறுவனம் அத்தனை எளிதாக இந்தியாவில் தொழில் தொடங்கிவிடவில்லை. மத்திய மாநில அரசுகளின் தீவிர முயற்சிகளே இந்த நிறுவனத்தை இந்தியாவிற்குள் வர வழைத்தது. ஐபோன் உற்பத்தியை பொறுத்தவரை சீனாவில் தான் அதற்கு தொழில் நுட்பம், இயந்திரங்கள், ஆலைகள் இருக்கின்றன என மனநிலையை இந்தியா மாற்றி அமைத்துள்ளது.
நிதியுதவிகளும், சலுகைகளும்: மத்திய அரசு இந்தியாவை எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி மையமாக மாற்ற வேண்டும் என்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு இதுபோன்ற நிறுவனங்களுக்கு மானியம் உள்ளிட்டவற்றை அறிவித்தன. முதன் முதலில் மத்திய அரசு 2020 ஆம் ஆண்டு உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட நிதி உதவி திட்டத்தை கொண்டு வந்தது. இதில் ஸ்மார்ட் போன் உற்பத்தியும் அடங்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தான் பாக்ஸ்கான் நிறுவனம் தன்னுடைய ஐபோன் உற்பத்தி ஆலையை இந்தியாவில் நிறுவியது.
தமிழ்நாட்டில் ஐபோன் ஆலை: தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நிறுவி இருக்கும் ஆலை மூலம் பாக்ஸ்கான் நிறுவனம் 2,000 கோடிக்கும் அதிகமான மத்திய அரசின் நிதியுதவியை பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசும் தன் பங்கிற்கு பாக்ஸ்கான் நிறுவனம் ஆலை அமைக்க தேவையான இடம் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. இந்நிறுவனம் சென்னையை தேர்ந்தெடுத்த காரணம் இங்கே திறன் மிகு ஊழியர்கள் கிடைக்கின்றனர், அருகிலேயே விமான நிலையமும் துறைமுகமும் இருக்கிறது.

தமிழ்நாடு அரசின் சலுகைகள்: பாக்ஸ்கான் நிறுவனத்தின் ஏற்றுமதி இறக்குமதிக்கு உகந்த நகரமாக சென்னை இருக்கிறது. தமிழ்நாடு அரசு பாக்ஸ்கான் ஆலை விரிவாக்கத்திற்கான அனைத்து சலுகைகளையும் வழங்கி வருகிறது. குறிப்பாக ஊழியர்களுக்கான தங்கும் இடம் உட்பட அனைத்து வசதிகளையும் அரசு செய்து தந்திருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் கூட தமிழ்நாடு அரசு பாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய எனர்ஜி ஸ்டோரேஜ் யூனிட்டுக்காக 200 ஏக்கர் இடத்தை வழங்கியது.
தென் மாநிலங்களில் விரிவாக்கம்: தமிழ்நாடு , கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்கள் புதிய உற்பத்தி ஆலைகளை நிறுவுவதற்கான அனுமதி வழங்கும் காலத்தை வெகுவாக குறைத்துள்ளன. கிட்டதட்ட ஒரு வார காலத்திற்குள்ளேயே அனைத்து அனுமதிகளும் கிடைக்கும் வகையில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளன. எனவே தான் பாக்ஸ்கான் தமிழ்நாடு மட்டுமில்லாமல் கர்நாடகா, ஆந்திராவிலும் ஐபோன்கள் மட்டுமில்லாமல் ஐபாட் உள்ளிட்ட பிற சாதனங்களின் உற்பத்தியையும் தொடங்க இருக்கிறது.
அதிகரித்த ஐபோன் உற்பத்தி: பாக்ஸ்கான் வருகை தான் டாடா நிறுவனமும் நம்பிக்கையுடன் ஐபோன் அசெம்ப்ளி ஆலையை அமைக்க காரணமாகி இருக்கிறது. தற்போது இந்தியா உலகிலேயே இரண்டாவது பெரிய ஐபோன் உற்பத்தி நாடாக மாறி இருக்கிறது. 2014ஆம் ஆண்டில் இந்தியாவில் 18, 900 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐபோன்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், 2024 ஆம் நிதி ஆண்டில் அது 25 மடங்கு அதிகரித்து 4,22,000 கோடி ரூபாய் என உயர்ந்துள்ளது.
சீனாவின் தந்திரம்: உலக அளவில் பயன்படுத்தப்படும் 20 சதவீத ஐபோன்கள் இந்தியாவில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் இது தான் சீனாவுக்கு உறுத்துகிறது. சீனா , இந்தியாவின் ஐபோன் உற்பத்திக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கிவிட்டது. ஐபோன் உற்பத்திகான உபகரணங்கள் சீனாவில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. சீன அரசாங்கம் இந்த உபகரணங்கள் இந்தியா வராத வகையில் பல காரணங்களை கூறி தங்கள் துறைமுகங்களிலேயே முடக்கி வைத்துள்ளன.
இயந்திரங்கள் முடக்கம்: இது பாக்ஸ்கான் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்திக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. அதே போல சீனாவில் இருந்து வர கூடிய இயந்திரங்கள் அனைத்துமே சீன மொழியில் கோடிங் செய்யப்பட்டவை. எனவே பாக்ஸ்கான் நிறுவனம் சீனாவில் இருந்து ஊழியர்களையும் தொழில்நுட்ப நிபுணர்களையும் வரவழைத்து தான் ஐபோன் உற்பத்தி ஆலைகளை இயக்குகிறது. அவர்களை கொண்டு இந்திய ஊழியர்களுக்கு பயிற்சி வழங்குகிறது.

சீன பொறியாளர்கள்: இந்நிலையில் திடீரென பாக்ஸ்கானில் வேலை செய்து வந்த 300க்கும் அதிகமான சீன தொழில்நுட்ப நிபுணர்கள் மீண்டும் தாயகத்திற்கே சென்றுவிட்டனர். இது பாக்ஸ்கானுக்கு மேலும் ஒரு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த இடத்தில் தான் இந்தியாவால் சீனாவின் உதவியே இல்லாமல் ஐபோன்களை உற்பத்தி செய்ய முடியாதா என்ற கேள்வி எழுகிறது.
சீன மொழியில் இயந்திரங்கள்: இந்தியாவில் பாக்ஸ்கான் நிறுவன ஊழியர்களில் 1 % பேர் சீனாவை சேர்ந்தவர்கள், ஐபோன் உற்பத்தி என்பது மிக நுட்பமான தொழில்நுட்பம் கொண்டது என்பதால் இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு அதற்கு பயிற்சி கட்டாயம். இது தவிர இயந்திரங்கள் அனைத்தும் சீன மொழியில் கோடிங் செய்யப்பட்டவை ., சீன அரசு கூடுதலாக இயந்திரங்கள் இந்தியாவுக்கு வராமல் தடுக்கிறது. இந்தியாவில் இருந்து பொறியாளர்களையும் தாயகம் அழைத்து கொண்டது.
சீனா உதவி நிச்சயம் தேவையா?: இந்த நெருக்கடியை இந்தியாவும் , பாக்ஸ்கான் நிறுவனம் எப்படி சமாளிக்கிறது என்பதை பார்த்தால் இந்தியாவால் சீனாவின் உதவி இல்லாமல் ஐபோன் உற்பத்தி செய்ய முடியாதா என்ற கேள்விக்கான பதில் கிடைத்துவிடும். பாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் தொழில் விரிவாக்கத்தை விட்டுக்கொடுப்பதாக இல்லை. முதலில் சீன இயந்திரங்களில் இருக்கும் சீன மொழி கோடிங்கை ஆங்கிலத்திற்கு மாற்றி வருகிறது. எனவே ஆங்கிலத்தில் இருந்தால் இந்திய பொறியாளர்களே எளிமையாக அவற்றை பயன்படுத்த முடியும்.
மாற்று திட்டம்: சீனா ஐபோன் உற்பத்தி இயந்திரங்களை துறைமுகங்களிலேயே முடக்கி இருக்கும் நிலையில் வேறு நாடுகளில் இருந்து இந்த இயந்திரங்களை இறக்குமதி செய்ய முடியுமா என்ற ஆய்வு நடந்து வருகிறது. தற்போதைக்கு இது கூடுதல் செலவை ஏற்படுத்தினாலும் நீண்ட கால நோக்கில் சீனாவை சார்ந்திருக்கும் போக்கு மாறும். பாக்ஸ்கான் நிறுவனம் சீன பொறியாளர்களுக்கு மாற்றாக தைவான், கொரியா, வியட்நாம் நாடுகளை சேர்ந்த பொறியாளர்களை பணிக்கு அமர்த்தி வருகிறது. எனவே தற்போது சீனாவின் நெருக்கடியால் ஐபோன் உற்பத்திக்கு சிக்கல் என்பது பிரச்சினையாக தெரிந்தாலும் புதிய தொழில்நுட்பங்களை கற்று தரும் ஒரு வாய்ப்பாகவும் இது அமைந்திருக்கிறது. எனவே சீனாவின் உதவி இல்லாமல் ஐபோன் உற்பத்தி என்ற நிலையை இந்தியா எட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications