இந்தியாவில் சில்லறை விலை பணவீக்கம் தொடர்ந்து 4 மாதங்களாக 6 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் காரணத்தால் ஆர்பிஐ திடீர் அறிவிப்பாக ரெப்போ விகிதத்தை 0.40 உயர்த்தியது. இது மத்திய அரசுக்கே அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்த வேளையில், இந்தியப் பொருளாதாரம் மந்த நிலைக்குச் செல்லும் முன்பு மத்திய நிதியமைச்சர் இன்று பொருளாதாரம், வர்த்தகத்தை மேம்படுத்து முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.
இந்தியாவில் தற்போது சாமானிய மக்களின் பாடாய்ப்படுத்தும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துள்ள மத்திய அரசு மாநில அரசுக்கும் விலையைக் குறைக்க வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதன் மூலம் தமிழ்நாடு அரசும் பெட்ரோல், டீசல் விலை குறைக்குமா என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
மத்திய அரசு கடந்த 40 நாட்களாகப் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றும் செய்யாமல் இருந்தது சாமானிய மக்களுக்குப் பெரிய அளவில் உதவியது. இதற்கிடையில் சீனா லாக்டவுன் கட்டுப்பாடுகளைத் தளர்த்திய நிலையில் கச்சா எண்ணெய் விலை உயரத் துவங்கியது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அச்சம் நிலவியது.
கலால் வரிக் குறைப்பு
இதற்கிடையில் மத்திய நிதியமைச்சர் இன்று மக்களின் சுமையைக் குறைக்கும் விதமாகப் பெட்ரோல் மீதான கலால் வரியில் லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்துள்ளது.
இதன் மூலம் ரீடைல் சந்தையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் இன்று டிவிட்டரில் அறிவித்தார்.
மாநில அரசுகளுக்குக் கோரிக்கை
இதைத் தொடர்ந்து அனைத்து மாநில அரசுகளையும், குறிப்பாகக் கடந்த நவம்பர் 2021 வரி குறைக்கப்படாத மாநிலங்களையும், இதேபோன்ற வரிக் குறைப்பை அமல்படுத்தி, சாமானிய மக்களின் சுமையைக் குறைக்க வலியுறுத்துவதாக நிர்மலா சீதாராமன் மாநில அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
முக.ஸ்டாலின் அரசு
முக.ஸ்டாலின் தலைமையிலான திமுகக் கட்சி ஆட்சிக்கு வரும் முன்னர்த் தனது தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் லிட்டருக்கு 4 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 5 ரூபாயும் குறைப்பதாக அறிவித்தது.
இந்நிலையில் ஆட்சியைப் பிடித்த பின்பு முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு நிதி நிலையை ஆய்வு செய்த பின்பு பெட்ரோல் விலையில் 3 ரூபாயைக் குறைப்பதாக முதல் பட்ஜெட் அறிக்கையில் அறிவித்தார் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
முதல் மாநிலம்
இந்தியாவில் பெட்ரோல், டீசலின் அதிகப்படியான விலையில் இந்திய பொருளாதாரம் சரிவில் இருந்து போது முதல் மாநிலமாகத் தமிழ்நாடு பெட்ரோல் விலையை 3 ரூபாய் குறைத்த நிலையில் நவம்பர் 2021ல் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தது.
நவம்பர் 2021 விலை குறைப்பு
நவம்பர் 2021ல் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்த பின்பு பல மாநிலங்கள் வாட் வரியை குறைத்தது, ஆனால் அப்போது தமிழக அரசு குறைக்கவில்லை. தற்போது மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியில் லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்துள்ளது.
தமிழ்நாடு அரசு பதில் என்ன..?
இதனால் நவம்பர் 2021ல் வாட் வரியை குறைக்காத தமிழ்நாடு அரசு இப்போது வாட் வரியை குறைக்குமான என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் மத்திய நிதியமைச்சரும் மாநில அரசுகளை வரி குறைக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.