இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்பட்டு வந்த பெங்களூருவில் கடந்த சில நாட்களாகப் பெய்து வந்த கன மழையால் நகரத்தின் பெரும்பாலான இடங்களில், அதிலும் ஐடி நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்கள் வசிக்கும் இடங்களில் அதிகளவில் தண்ணீர் தேங்கி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கர்நாடக ஐடி நிறுவனங்களின் சங்கம் இது குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எழுதிய கடிதத்தில், இந்த மழையால் தங்களுக்கு 225 கோடி ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளது.
உடனே அவற்றைச் சரி செய்து நடவடிக்கை எடுங்கள். இல்லை என்றால் நாங்கள் வேறு நகரங்களுக்கு மாறுவதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்துள்ளன.
மும்பை
மும்பையில் சமீபத்தில் ஒரு முறை அதிக கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, மகாராஷ்டிரா கடல்சார் வாரியத்துடன் இணைந்து மும்பை நகரின் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஊபர் நிறுவனம் படகு சேவையை வழங்கியது.
ஜேசிபி, டிராக்டர்
பெங்களூருவின் ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் தண்ணீர் அதிகம் தேங்கியுள்ளதால், வேலைக்குச் சென்ற பல ஐடி ஊழியர்கள் வீடுகளுக்கு ட்டிராக்டர் மற்றும் ஜேசிபி உதவியுடன் வீடு திரும்பும் படங்கள், வீடியோக்கள் செய்திகளாக வெளியாகி வருகின்றன.
படகு சேவை
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி தண்ணீர் சாலை, குடியிருப்பு பகுதிகளில் புகுந்துள்ளன. இந்நிலையில் ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனமான ஊபர் பெங்களூருவில் படகு சேவை வழங்குவது போல புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
உண்மையா?
ஆனால் இதில் உண்மை இல்லை. பெங்களூருவில் அதிகம் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் சென்று ஊபர் செயலியை பயன்படுத்தினாலும் கார், ஆட்டோ சேவைகள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களில் அது கிண்டலுக்காகப் பகிர்ந்த புகைப்படமாகவே இருக்கும் என அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.
ஊபர்
ஊபர் படகு சேவை வழங்கியிருந்தால் கண்டிப்பாக அதை விளம்பரப்படுத்தி இருக்கும். ஆனால் இப்போது வரை ஊபர் அப்படி ஏதும் செய்யவில்லை. இது பொழுதுபோக்குகாக பெங்களூரூவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி சூழலை கிண்டல் செய்யவே உருவாக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.