சீனாவில் கொரோனா, உக்ரைன் - ரஷ்யா பேச்சுவார்த்தை, கச்சா எண்ணெய் விலையில் அதிகப்படியான மாற்றங்கள், அமெரிக்காவின் வட்டி விகிதம், தங்கம் விலை உயர்வு எனப் பல மாற்றங்களை எதிர்கொண்டு வரும் நிலையில் ரீடைல் முதலீட்டாளர்கள் பலர் கிரிப்டோ முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்பை மிஸ் செய்து உள்ளனர்.
கடந்த 3 வாரத்தில் பல முன்னணி கிரிப்டோகரன்சி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இது முதலீட்டு வாய்ப்பை பல இந்திய முதலீட்டாளர்கள் 30 சதவீத வரி, 1 சதவீதம் TDS விதிப்புக் காரணமாக மிஸ் செய்துள்ளனர்.
கிரிப்டோ சந்தை
கிரிப்டோ சந்தையில் மீம் காயின் பிரிவில் மிகவும் பிரபலமான டோஜ்காயின் விலை இன்றைய வர்த்தகத்தில் 5.66 சதவீதம் உயர்ந்து 0.1502 டாலர் அளவீட்டைத் தொட்டு சந்தை மதிப்பீட்டு அளவு 19.933 பில்லியன் டாலராக உயர்ந்தது. இதன் மூலம் கடந்த 3 வாரத்தில் டோஜ்காயின் விலை 40 சதவீதம் உயர்வைப் பதிவு செய்துள்ளது.
எலான் மஸ்க்
இன்றைய டோஜ்காயின் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வாங்கியது தான் எனக் கூறப்படுகிறது. டோஜ்-ன் தந்தை எனச் செல்லமாக அழைக்கப்படும் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது பல மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாக் டோர்சி
ஏற்கனவே டிவிட்டர் நிறுவனத்தின் நிறுவனரான ஜாக் டோர்சி பிளாக்செயின் பேமெண்ட் சேவையை அறிமுகம் செய்யும் பணிகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில் கிரிப்டோவை பெரிய அளவில் ஆதரிக்கும் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தில் சேர்ந்துள்ளது, டோஜ்காயின் முதலீட்டாளர்கள் மத்தியில் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
கிரிப்டோகரன்சி விலை
கிரிப்டோகரன்சியில் மிக முக்கியமான கரன்சியான பிட்காயின் கடந்த 30 நாளில் 20 சதவீதமும், எதிரியம் 34.02 சதவீதமும், பினான்ஸ் காயின் 19.73 சதவீதமும், சோலானோ 51.19 சதவீதமும், டெரா 38.61 சதவீதமும், கார்டானோ 41.77 சதவீதமும், அவலான்சி 26.56 சதவீதமும், போல்காடாட் 35.51 சதவீதமும், டோஜ்காயின் 22.18 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.