இந்தியாவில் உள் நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை கடந்த நவம்பர் 2019-ல் பயங்கரமாக அதிகரித்து இருக்கிறதாம். இந்த 2019-ம் ஆண்டிலேயே, இந்த நவம்பர் 2019-ல் தான் அதிகபட்சமாக 11.2 சதவிகிதம் பயணிகளின் எண்ணிக்கை வளர்ந்து இருக்கிறதாம்.
அதாவது கடந்த நவம்பர் 2018-ல் பயணித்த விமானப் பயணிகளின் எண்ணிக்கையை விட, இந்த நவம்பர் 2019-ல் பயணித்த விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நவம்பர் 2019-ல் மொத்தம் 129.5 லட்சம் விமானப் பயணிகள் பயணம் மேற்கொண்டு இருப்பதாக, விமான பயணிகள் இயக்குநரகம் சொல்லி இருக்கிறது.
கடந்த நவம்பர் 2019-ல் ஸ்பைஸ் ஜெட்டில் அதிக அளவிலான விமானப் பயணிகள் தங்கள் பயணங்களை மேற்கொண்டு இருக்கிறார்கள். கடந்த நவம்பர் 2018-ல் ஸ்பைஸ் ஜெட் விமான சேவை நிறுவனத்தில் பயணித்த விமானப் பயணிகளின் எண்ணிக்கையை விட, இந்த நவம்பர் 2019-ல் சுமார் 42 சதவிகிதம் கூடுதல் விமானப் பயணிகள் தங்கள் பயணங்களை மேற் கொண்டு இருக்கிறார்கள்.
வழக்கம் போல, இண்டிகோ நிறுவனம் இந்தியாவின் அதிகபட்ச விமானப் பயணிகளுக்கு விமான சேவை வழங்கி இருக்கிறார்கள். நவம்பர் 2019-ல் விமானப் பயணம் மேற்கொண்ட 129.5 லட்சம் பயணிகளில், 61.5 லட்சம் விமானப் பயணிகளுக்கு இண்டிகோ நிறுவனம் தான் விமான சேவைகளை வழங்கி இருக்கிறது.
இந்த 2019-ம் வருடம் தொடங்கியதில் இருந்தே, ஜெட் ஏர்வேஸ் தன் சேவையை நிறுத்திக் கொண்டது மற்றும் ஏர் இந்தியா வியாபாரத்தில் அதிகம் நாட்டம் காட்டாமல் இருந்தது போன்ற காரணங்களால், இந்திய விமானப் பயணிகளை இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், விஸ்தாரா, ஏர் ஏஷியா, கோ ஏர் போன்ற மற்ற அனைத்து விமான சேவை நிறுவனங்களும் பங்கு போட்டுக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல, குறித்த நேரத்தில் முறையாக விமானங்களை இயக்குவதில் கோ ஏர் நிறுவனம் முதலிடம் பிடித்து இருக்கிறது. கோ ஏரைத் தொடர்ந்து, விஸ்தாரா, ஏர் ஏஷியா, இண்டிகோ ஆகிய நிறுவனங்கள் குறித்த நேரத்தில் விமானங்களை இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள். நம் ஏர் இந்தியா, குறித்த நேரத்தில் விமானங்களை இயக்குவதில், கடைசி இடத்தைப் பிடித்து இருக்கிறது.