இந்தியாவில், உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி, கடந்த 2019 ஜூன் விட, இந்த ஜூன் 2020-ல் 6 சதவிகிதம் குறைந்து இருக்கிறது.
அதே போல, கடந்த 2019 ஜூன் மாதத்தை விட, இந்த ஜூன் 2020-ல் இயற்கை எரிவாயு உற்பத்தி 12 சதவிகிதமும் சரிந்து இருக்கிறது.
கொரோனா வைரஸ் பிரச்சனையால், இந்தியாவில் ஜூன் 2020 மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி 2,527 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு குறைந்து இருக்கிறதாம். அரசின் ஓ என் ஜி சி நிறுவனத்தின் எண்ணெய் வயல்கள் மற்றும் கிணறுகளில் 1 சதவிகிதம் உற்பத்தி சரிந்து இருக்கிறதாம்.
ஆயில் இந்தியா நிறுவனம் கையாளும் எண்ணெய் வயல்கள் மற்றும் கிணறுகளில், உற்பத்தி 10 சதவிகிதம் குறைந்து இருக்கிறதாம். தனியார் நிறுவனங்களின் கச்சா எண்ணெய் உற்பத்தி 16 சதவிகிதம் குறைந்து இருக்கிறதாம்.
கிணறுகளின் செயல் திறன் குறைந்தது, தாமதமான எண்ணெய் வயல் மேம்பாட்டுத் திட்டங்கள், கொரோனா வைரஸ் பிரச்சனை போன்றவைகளால் கச்சா எண்ணெய் உற்பத்தி சரிந்து இருக்கிறதாம்.
இயற்கை எரிவாயு உற்பத்தி 2,324 மில்லியன் மெட்ரிக் கன மீட்டராக குறைந்து இருக்கிறதாம். முக்கியமாக வாடிக்கையாளர்களின் குறைவாக வாங்குவது இயற்கை எரிவாயு உற்பத்தி குறைவுக்கு முக்கிய காரணமாக சொல்கிறார்கள்.
அரசின் ஓ என் ஜி சி நிறுவனத்தின் எரிவாயு உற்பத்தி 9 சதவிகிதம் சரிந்து இருக்கிறதாம். தனியார் நிறுவனங்களில் இயற்கை எரிவாயு உற்பத்தி இந்த ஜூன் 2020 மாதத்தில் 29 சதவிகிதம் சரிந்து இருக்கிறதாம்.
கடந்த 2019 ஜூனைக் காட்டிலும், சுத்திகரிப்பு நிலையங்கள் ஜூன் 2020 மாதத்தில் 13.6 சதவிகிதம் குறைவாகவே கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து இருக்கிறார்களாம். அரசு நடத்தும் சுத்திகரிப்பு கம்பெனிகளில் கடந்த ஆண்டை விட 9.2 சதவிகிதம் குறைவான கச்சா எண்ணெய்யை சுத்தீகரித்து இருக்கிறார்களாம்.
தனியார் கம்பெனிகள் கடந்த ஆண்டை விட, இந்த ஜூன் 2020-ல் 16 சதவிகிதம் குறைவாக கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து இருக்கிறார்களாம்.
இப்போது தான், இந்தியாவில் பல மாநிலங்களும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த விதித்த லாக் டவுன்களை மெல்ல விலக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த ஜூலை மாதத்தில் மெல்ல கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.