இந்தியாவில் எந்த ஒரு சொத்தை வாங்கினாலும் சரி கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அதுவும் குறிப்பாக இந்திய பதிவுச் சட்டத்தில் 100 ரூபாய்க்கு மேல் எந்த சொத்தை ஒருவர் பெயரில் இருந்து மற்றொருவர் பெயருக்கு மாற்றினாலும் அதை எழுத்துப்பூர்வமாக சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். இதனால் தான் வீடு, மனை, கடை, பிளாட் என எதை வாங்கினாலும் பதிவு செய்கின்றனர்.
ஒருவருடைய பெயரில் இருக்கும் நிலத்தை உங்கள் பெயருக்கு மாற்றி பதிவு செய்தால் மட்டும் அந்த சொத்துக்கு நீங்கள் உரிமையாளராக மாறிவிட முடியாது. அதற்கு முன்னர் ஒரு சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். சொத்தை விற்றவருக்கு அந்த சொத்தில் முழு உரிமை இருக்கிறதா?, சொத்தை வைத்து கடன் வாங்கி இருக்கிறாரா?, கோர்ட் வழக்கு ஏதும் நிலுவையில் உள்ளதா? என்பதை எல்லாம் கட்டாயம் பார்க்க வேண்டும்.

ஒரு சில நேரங்களில் உரிமையாளர் ஒரே சொத்தை 2 முறை விற்பனை செய்ததாக செய்திகள் வெளியாவதைப் பார்த்திருப்பீர்கள். விற்பனை செய்யப்படும் சொத்தை பற்றி சரிவர தெரிந்து கொள்ளாமல் வாங்குவதால் தான் பிரச்சனை ஏற்படுகிறது. இதுபோன்ற மோசடியில் சிக்கி பல லட்சம் கொடுத்து ஏமாந்தவர்களை யோசித்துப் பாருங்கள்..
எந்த ஒரு சொத்தை வாங்கினாலும் சரி விற்பனை செய்பவரின் முழு விவரங்களையும் ஆராய்ந்த பிறகே வாங்க வேண்டும். பத்திரப்பதிவு செய்வது என்பது ஒரு சொத்தின் உரிமையை ஒருவர் பெயரில் இருந்து மற்றொரு பெயரில் மாற்றுவதற்கான ஆவணம் அவ்வளவுதான்.
சொத்து பத்திரம் மட்டும் போதாது: ஒரு சொத்தை வாங்குவதற்கு பத்திரப்பதிவு முக்கியம் தான். ஆனால் பதிவு செய்து விட்டோம் என்பதற்காக அந்த சொத்தின் முழு உரிமையும் உங்களுக்கு வந்து விடாது. சொத்தை விற்பனை செய்தவருக்கு ஏதாவது சட்ட பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது அந்த சொத்தில் வேறு யாருக்காவது உரிமை இருந்தாலோ பத்திரப்பதிவு மூலம் அந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாது. நீங்கள் சொத்தை வாங்கும்போது பணம் கொடுத்து வாங்கியதற்கான பதிவாக மட்டுமே சார்பதிவாளர் அலுவலகம் உங்கள் விவரங்களை குறித்துக்கொள்ளும். இதனால் சொத்தில் இருக்கும் வில்லங்கங்கள் எதுவுமே மாறாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சொத்து வாங்குபவர்கள் எந்தெந்த விஷயங்களை கவனிக்க வேண்டும்?: ஒரு சொத்தை வாங்குபவர் அதற்கு முன்னர் அந்த சொத்து யார் பெயரில் இருந்தது?, அதிலிருந்து யார் பெயருக்கு மாற்றப்பட்டது? என்ற அனைத்து விவரங்களையும் சரிபார்க்க வேண்டும். அதேபோல அந்த சொத்துக்கு பட்டா, சிட்டா, வில்லங்கச் சான்றிதழ் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருக்கும் டேட்டாவை சரி பார்ப்பது நல்லது.
பழைய உரிமையாளரின் விபரங்களை சரிபாருங்கள்: சொத்தை உங்களுக்கு யார் விற்பனை செய்கிறார் என்பதை மட்டும் பார்க்காமல்.. கடந்த 10, 15 வருடங்களாக யார் பெயரில் சொத்து இருந்தது?, யாரிடமிருந்து யாருக்கு கை மாறியது? என்பதை சரி பார்க்க வேண்டும். அதற்கு தாய் பத்திரம் இருக்கிறதா என்பதையும் கேட்டுக் கொள்ளுங்கள்.
ஈசி (EC): வில்லங்கம் சர்டிபிகேட் எடுத்து பார்த்தால் அந்த சொத்தின் பெயரில் கடன் பெறப்பட்டு இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு விவரங்கள் புரியவில்லை என்றால் ஒரு வழக்கறிஞர் மூலம் லீகல் ஒப்பினியன் பெறலாம். ஆவண தயாரிப்பு அலுவலகங்களில் ஈசி கேட்டால் ஆன்லைன் மூலமாக ஒரு சில நிமிடங்களில் எடுத்துக் கொடுத்து விடுவார்கள்.
பத்திரப்பதிவு செய்த பிறகு என்னென்ன செய்ய வேண்டும்?: பத்திரப்பதிவு செய்து முடித்த பின்னர் பட்டாவில் உங்கள் பெயரை மாற்ற வேண்டும். இதை உடனடியாக செய்து முடிக்க வேண்டும். அதேபோல நீங்கள் வாங்கும் இடத்திலோ அல்லது மனையிலோ குடிநீர் இணைப்பு, எலெக்ட்ரிசிட்டி இணைப்பு இருந்தால் அதையும் உங்கள் பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும். சொத்தை வாங்கும் போது பத்திரப்பதிவு செய்யப்படுவது ஒரு பகுதி தானே தவிர இதனால் சொத்து முழுமையாக உங்களுடையதாக மாறிவிடாது. எனவே வாங்குவதற்கு முன்னரே சொத்தில் ஏதும் வில்லங்கம் இருக்கிறதா? என்பதை எல்லாம் சரிபார்க்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் சிக்கல் இல்லாமல் இருக்கும்.


Click it and Unblock the Notifications
