அமெரிக்கா - ஈரான் மத்தியில் ராணுவ தாக்குதல் அடிப்படையிலான போர் தற்போது வர்த்தக போராக மாறியிருக்கும் வேளையில் அடுத்தடுத்து வர்த்தக தடைகளும், முடக்கமும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கன்சர்வேடிவ் ரோடியவின் தொகுப்பாளர் க்ளென் பெக்கின் நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், முஜ்தபா கமேனி அமெரிக்காவின் தாக்குதலில் பாதிக்கப்பட்டு உயிருக்கு கடுமையாக போராடி வருகிறார் என தெரிவித்தது உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த பேட்டியில் ஈரானின் உச்ச தலைவர் முஜ்தபா கமேனி உயிருடன் இருப்பதாக தான் நம்புவதாக தெரிவித்தார். பிப்ரவரி மாதம் தனது தந்தையின் மரணத்துக்குப் பிறகு பொறுப்பேற்றதிலிருந்து பொதுவெளியில் வரவில்லை, அவரது தந்தையின் இறுதி சடங்கிற்கு கூட வரவில்லை.

இதனால் முஜ்தபா கமேனி உண்மையிலேயே உயிருடன் தான் இருக்கிறாரா என்ற சந்தேகம் ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் மத்தியிலேயே உள்ளது. காரணம் கடந்த சில மாதங்களாகவே கடிதம் வாயிலாக மட்டுமே முஜ்தபா கமேனி அவருடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் டிரம்ப்-ன் க்ளென் பெக் உடனான பேட்டியில் அமெரிக்காவின் தாக்குதலில் முஜ்தபா கமேனி மிகவும் கடுமையாக காயமடைந்தார். உடலின் இடது பக்கம், கை, கால் என முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் இறந்துவிடவில்லை என்று டிரம்ப் கூறினார்.
முஜ்தபா கமேனி பிப்ரவரி மாதம் ஈரான் போர் துவங்கிய சில நாட்களிலேயே அவரது தந்தை அயத்துல்லா அலி கமேனி அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து செய்த தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு ஈரான் நாட்டின் உச்ச தலைவர் பொறுப்பை ஏற்றார். அப்போதிலிருந்து முஜ்தபா கமேனி பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை.
இதனால் அவரது உடல்நிலை, அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்து வருகிறது. இந்த மாதம் தொடக்கத்தில் கூட ஈரான் நாட்டின் அதிபர் மசூத் பெஜெஷ்கியான், தலைவர் முஜ்தபா கமேனியை தொடர்புகொள்வது என்பது தற்போது மிகவும் கடினமாக உள்ளது என தெரிவித்திருந்தார்.
நாட்டின் அனைத்து தலைவர்கள், அமைப்புகள், மக்களிடம் முஜ்தபா கமேனி கடிதம் வாயிலாக மட்டுமே தொடர்புகொண்டு வருகிறார் எனவும் குறிப்பிட்டார். டிரம்ப் இந்த பேட்டியில் ஈரான் தலைமை நிர்வாகம் அவ்வளவு மரியாதைக்குரிய அமைப்பு இல்லை, விரைவில் ஈரான் போரில் அமெரிக்கா மிகப்பெரிய வெற்றியை அடையும் என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications