இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப துறை பல தடைகளைச் சந்தித்தாலும் தொடர்ந்து பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பைக் கொடுத்து, வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் செய்ததது போலவே தற்போது 2வது மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் செய்ய முடிவு செய்துள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பின் மூலம் மாணவர்கள் முதல் ஊழியர்கள் வரையில் அனைவரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
பிரஷ்ஷர்ஸ்
ஒவ்வொரு வருடமும் இன்போசிஸ் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்கள் பல கட்டங்களில் ஆய்வு செய்து பணியில் அமர்த்தும். இப்படித் தேர்வு செய்யப்படும் மாணவர்களில் சிறந்த கம்பியூட்டர் ப்ரோகிராமிங் திறன் கொண்டவர்களுக்கு 2 மடங்கு அதிகச் சம்பளத்தை உடனடியாகக் கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனம் திறன் வாய்ந்த மாணவர்கள் அமைப்பை ஆரம்பக் கட்டத்திலேயே உருவாக்குகிறது.
பவர் ப்ரோகிராமர்ஸ்
இன்போசிஸ் இத்திட்டத்தைப் பவர் ப்ரோகிராமர்ஸ் என்று அழைக்கிறது. இன்போசிஸ் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் சாதாரண இன்ஜினியரிங் கல்லூரி முதல் ஐஐடி, என்ஐடி எனப் பல கல்லூரிகளுக்கு வளாகத் தேர்வுக்காகச் செல்கிறது. இப்படித் தேர்வு செய்யும் மாணவர்களுக்கு மற்ற தேர்வு செய்யப்படும் மாணவர்களை விடவும்
2 மடங்கு சம்பளம் கொடுக்கப்படும் என இன்போசிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் இன்போசிஸ் இத்திட்டத்தின் கீழ் 500 மாணவர்களைத் தேர்வு செய்தது.
5 சதவீத மாணவர்கள்
மாணவர்களுக்கான பயிற்சி முடிந்த பின்னர் இன்போசிஸ் நிர்வாகம் நடத்தும் கோடிங் டெஸ்ட் அல்லது hackathons நடத்தும். அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இந்த இரட்டிப்புச் சம்பளம் வழங்கப்படும் அதுமட்டும் அல்லாமல் டாப் 5 சதவீத தலைசிறந்த ஊழியர்களைத் தேர்வு செய்யும் பணியும் இதன் மூலம் முடிவடைகிறது.
இவர்களின் திறன் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு வருடம் அதிகளவிலான போனஸ், பதவி உயர்வும் இவர்களுக்கு வழங்க இன்போசிஸ் திட்டமிட்டு உள்ளது.
டிஜிட்டல் டேக்
இதேபோன்ற மற்றொரு திட்டத்தில், இன்போசிஸ் பட்டியலிட்டுள்ள 32 திறன்கள் கொண்டு இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு டிஜிட்டல் டேக் திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுக் காலாண்டு வாரியாகப் போனஸ் கொடுக்கப்பட உள்ளது. கடந்த காலாண்டில் இன்போசிஸ் நிர்வாகம் சுமார் 2000 ஊழியர்களுக்குச் சிறப்புக் காலாண்டு போனஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.
இதோடு இப்படித் தேர்வு செய்யப்படும் ஊழியர்களை நேரடியாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பயிற்சி கொடுக்கப்பட்டு இன்போசிஸ் நிறுவனத்தின் முக்கியமான டிஜிட்டல் பிராஜெக்ட்-இல் சேர்க்கப்படுவார்கள்.
ஆள் பற்றாக்குறை
இந்தியாவில் பல மென்பொருள் நிறுவனங்கள் வந்துள்ள காரணத்தால் திறன் வாய்ந்த ஊழியர்களைப் பெறுவது மிகவும் கடினமாக உள்ளது. இப்படி ஊழியர்களைத் தேடிப்பிடித்தாலும் அவர்களைத் தக்கவைத்துக்கொள்வது என்பது மல்லுக்கட்டும் விஷயமாக மென்பொருள் நிறுவனங்களுக்கு விளங்குகிறது.
எனவே தான் திறன் வாய்ந்த ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களைத் தொடர்ந்து நிறுவனத்தில் தக்க வைத்துக்கொள்ளும் முயிற்சியாக இன்போசிஸ் இப்புதிய 2 திட்டங்களை அறிவித்துள்ளது.