சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பது சும்மா இருந்து பார்த்தால்தான் தெரியும் என தமிழ் திரைப்படம் ஒன்றில் வடிவேலு காமெடி ஒன்று இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில் சும்மா இருப்பதையே முழுநேர தொழிலாக ஜப்பானை சேர்ந்த ஒருவர் செய்து வருகிறார் என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி அவர் சும்மா இருந்து கொண்டு ஆயிரக்கணக்கில் சம்பாதித்து வருகிறார் என்பதும் ஒரு அரிய தகவலாக உள்ளது.
சும்மா இருக்கும் தொழில்
ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோ பகுதியை சேர்ந்த 38 வயதான ஷோஜி மொரிமோட்டோ என்பவர் சும்மா இருப்பதையே முழுநேர தொழிலாக கொண்டுள்ளார். அதற்கு அவர் ஒரு மணி நேரத்திற்கு 10,000 யென் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.5600 கட்டணம் பெறுகிறார்.
துணைக்கு செல்ல வேண்டும்
மெலிந்த தேகம் மற்றும் சராசரி உடலமைப்பு கொண்ட மொரிமோட்டோ, சும்மா இருப்பதையே தொழிலாக கொண்டுள்ளார். அதாவது அவர் ஜப்பான் நாட்டிலுள்ள முதியவர்களுடன் துணைக்கு செல்ல வேண்டும், நண்பர்கள் இல்லாதவர்களுக்கு துணையாக செல்ல வேண்டும், ஊர்சுற்றும் நபர்களுடன் ஜாலியாக கம்பெனி கொடுக்க வேண்டும் என்பது தான் இவரது தொழில்.
4000 பேர்களுக்கு பணி
இந்த பணிக்காக ஷோஜி மொரிமோட்டோவை பலர் அணுகி வருவதாகவும் இதற்காக அவர் ஒரு மணி நேரத்துக்கு 10,000 யென் வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவரை சுமார் 4000 பேர்களுக்கும் அதிகமானவர்களுடன் சும்மா சென்றுள்ளார். ஆனால் பாலியல்ரீதியான எந்த உறவுக்கும் சம்மதிப்பதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வாடகை
இது குறித்து ஷோஜி மொரிமோட்டோ கூறுகையில், 'உண்மையில் என்னை நானே வாடகைக்கு விடுகிறேன். எனது வாடிக்கையாளர் எங்கு செல்ல வேண்டுமா அவருடன் செல்கிறேன். நான் எந்த வேலையும் செய்ய வேண்டிய அவசியமில்லை. அவருடன் துணைக்கு சென்றால் மட்டுமே போதும். எனக்கு தேவையான கட்டணம் கிடைத்துவிடும் என்று அவர் கூறியுள்ளார்.
ட்விட்டர் ஃபாலோயர்கள்
இதனை அடுத்து அவர் சமூக வலைதளங்களில் பிரபலம் ஆகிவிட்டார். இந்நிலையில் மில்லியன் கணக்கில் அவரது ட்விட்டர் பக்கத்தில் பாலோயர்கள் கிடைத்துள்ளனர் என்பதும், அதில் அவரது வாடிக்கையாளர்களும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அவரை வேலைக்கு அமர்த்த பல வாடிக்கையாளர்கள் ட்விட்டர் மூலமே அணுகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிசினஸ்
இந்த பிசினஸில் கிடைக்கும் பணத்தை வைத்துதான் அவர் தனது மனைவி மற்றும் குழந்தையை காப்பாற்றி வருகிறார். இதன் மூலம் அவர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதை வெளிப்படையாக கூறவில்லை என்றும் அவர் தினமும் ஒன்று அல்லது இரண்டு வாடிக்கையாளர்களுக்கு 'சும்மா' இருக்கும் வேலையை செய்து வருவதாக கூறப்படுகிறது.
பயனுள்ள பணி
வேலை எதுவும் செய்யாமல் சும்மா இருப்பது தான் எனது பணி என்றாலும் மற்றவர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும் என்றும் அதனால்தான் என்னை பலர் அணுகுகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications