சீன நிறுவனங்கள் பலவும் சமீப காலமாக அடுத்தடுத்த சர்ச்சையில் சிக்கி வருகின்றன. பல நிறுவனங்களும் வரி ஏய்ப்பில் ஈடுப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு வருகின்றது.
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ உலகளவில் பிரபலமான ஒன்றாக இருந்து வருகின்றது.
இந்த நிறுவனம் 4,389 கோடி ரூபாய் வரி ஏய்ப்பில் ஈடுப்பட்டுள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகம் கண்டிபிடித்துள்ளது.
சுங்கவரியில் மோசடி
ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்து வரும் ஒப்போ, சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் விற்பனை செய்து வருகின்றது. குறிப்பாக இந்தியாவில் இதன் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் தான் சில தினங்களுக்கு முன்பு வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் மின்னணு சாதனங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களை இறக்குமதி செய்ததில் சுங்கவரியில் மோசடி செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.
போலி ஆவணங்கள் மூலம் மோசடி
இதனையடுத்து ஒப்போ நிறுவனம் மற்றும் அங்கு பணியாற்றும் முக்கிய பொறுப்பாளார்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் போலி ஆவணங்கள் மூலம் வரியை குறைத்து காட்டியுள்ளது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் ஒப்போ வரி ஏய்ப்பு செய்தது அம்பலமாகியுள்ளது.
வரி விலக்கு மூலம் பலன்
ஒப்போ நிறுவனம் தவறான அறிக்கை மூலம் 2981 கோடி ரூபாய் சுங்கவரி விலக்குப் பயன் அடைந்துள்ளதும், 1408 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதும் தெரிய வந்துள்ளதாக வருவாய் புலனாய்வு அறிக்கை கூறுகின்றது.
விவோ
கடந்த வாரம் சீனாவின் மற்றொரு ஸ்மார்ட்போன் பிராண்டான விவோ நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிரடியாக சோதனைகளை மேற்கொண்டது. அப்போது தனது மொத்த டர்ன் ஒவரில் 50% சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டிருப்பதும், விவோ நிறுவனத்துக்கு சொந்தமான 119 வங்கிக் கணக்குகளிலிருந்து 465 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ரொக்கம் 73 லட்சம் ரூபாய் மற்றும் 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. .
சீனாவின் புலம்பல்
ஏற்கனவே கடந்த வாரத்தில் விவோ மீது நடத்தப்பட்ட விசாரனைக்கு மத்தியில், இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம், சீன நிறுவனங்கள் மீதான அடுத்தடுத்த விசாரணைகள், சீனாவில் முதலீடு செய்யும் மற்ற நிறுவனங்களின் நம்பிக்கையை சேதப்படுத்துவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.