நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப வாகன பதிவு முறை தொடங்கி நம்பர் பிளேட் வரை பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்ட வண்ணம் உள்ளன. அந்த வகையில் அனைத்து வாகனங்களிலும் முக்கியமான அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும் என போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பழைய வாகனங்களை வைத்திருப்பவர்கள் இதனை செய்யாமல் விட்டால் கடும் அபராதத்தை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வாகனங்களிலும் உயர் பாதுகாப்பு கொண்ட நம்பர் பிளேன் அதாவது HSRP (High-Security Registration Plate) வகை பதிவு எண் பலகை தான் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என நீண்ட காலமாகவே அரசு அறிவுறுத்தி வருகிறது. இருந்தாலும் பழைய வாகனங்களை பயன்படுத்தும் பலரும் அதனை அப்டேட் செய்யாமல் பழைய நம்பர் பிளேட்டை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் தான் HSRP நம்பர் பிளேட் பொருத்தவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என பல்வேறு மாநிலங்களின் போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக உங்கள் வாகனத்தில் அதிக பாதுகாப்பு கொண்ட HSRP நம்பர் பிளேட் இல்லை என்றால், இனி உங்களால் வாகன புகை பரிசோதனை சான்றிதழை பெற முடியாது என்றும் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று போக்குவரத்து துறை தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வாகன திருட்டை தடுப்பது, குற்ற செயல்களில் ஈடுபடும் வாகனங்களை எளிதாக கண்டறிவது உள்ளிட்ட நோக்கங்களுக்காக தான் HSRP நம்பர் பிளேட் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டது. இது அரசால் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகை. வழக்கமான நம்பர் பிளேட்டுகளை போல இல்லாமல் இதில் லேசர் முறையில் பதிக்கப்பட்ட வாகனத்தின் தனித்துவமான அடையாள எண்கள், எரிபொருள் வகையை குறிக்கும் ஸ்டிக்கர்கள் மற்றும் ஹாலோகிராம் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

ஏப்ரல் 1, 2019-க்கு பிறகு வாங்கப்பட்ட அனைத்து புதிய வாகனங்களுக்கும் விற்பனையின்போதே இந்த HSRP நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு இருக்கும். ஆனால், ஏப்ரல் 1, 2019-க்கு முன்பு வாங்கப்பட்ட பழைய வாகனங்களுக்கும் இந்த நம்பர் பிளேட்டை பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாகன உரிமையாளர்களே இதனை மேற்கொள்ள வேண்டும். பலமுறை அறிவிப்பு வெளியிட்டும் பெரும்பாலான பழைய வாகன உரிமையாளர்கள் புதிய நம்பர் பிளேட்டை பொருத்தாமல் உள்ளனர்.
எனவே தான் HSRP நம்பர் பிளேட் இல்லாத பழைய வாகனங்களுக்கு மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் வாகனத்தில் HSRP நம்பர் பிளேட் இல்லை என போக்குவரத்து காவல்துறையினர் கண்டறிந்தால் முதல் முறை 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த தவற்றை மீண்டும் செய்தால் அபராத தொகை 10,000 ரூபாயாக உயருமாம்.
அதே போல HSRP நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களுக்கு புகை பரிசோதனை சான்றிதழை புதுப்பிக்க முடியாது. PUC சான்றிதழ் இல்லாமல் வாகனத்தை இயக்கினால், அதற்கும் தனியாக ரூ.10,000 வரை அபராதம் செலுத்த நேரிடும். கேமராக்கள் பொருத்தப்பட்ட சாலைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் தானியங்கி முறையில் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை ஸ்கேன் செய்து இந்த அபராதங்கள் ஆன்லைன் மூலம் நேரடியாக வாகன உரிமையாளருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.
வாகன உரிமையாளர்கள் https://www.bookmyhsrp.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகவே இதற்கு விண்ணப்பிக்கலாம். உங்களின் மாநிலம், ஆர்சி, வாகன பதிவு எண், இன்ஜின் எண் மற்றும் சேஸிஸ் எண் ஆகியவற்றை உள்ளிட்டு விண்ணப்பம் செய்து கட்டணம் செலுத்த வேண்டும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.200 முதல் ரூ.500 வரையிலும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.600 முதல் ரூ.1,500 வரையிலும் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எரிபொருள் வகையை குறிக்கும் ஸ்டிக்கருக்கு கூடுதலாக சுமார் ரூ.100 செலுத்த வேண்டியிருக்கும்.
தமிழ்நாட்டில் இது இன்னும் கட்டாயம் என அறிவிக்கப்படவில்லை. ஆனால் மற்ற மாநிலங்களை தொடர்ந்து இங்கும் இது நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளது. புது வாகனம் வாங்குவோர் தங்களின் நம்பர் பிளேட் HSRP வகையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பழைய நம்பர் பிளேட் வைத்திருப்பவர்கள் நேரம் கிடைக்கும் போது அதனை மாற்றி கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications

