நாட்டில் இரண்டாம் கட்ட பரவலானது மிக வேகமாக பரவி வரும் நிலையில், மீண்டும் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற கவலை எழுந்துள்ளது.
இதனை சுட்டிக் காட்டும் விதமாக கடந்த மார்ச் மாதத்தில் பல முக்கிய பொருளாதாரம் குறித்த குறியீடுகள் வீழ்ச்சியடைந்துள்ளன. ஆக இது மீண்டும் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பினை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வில், பொருளாதார வளர்ச்சியின் முக்கிய குறிகாட்டியான நுகர்வோர் நம்பிக்கையானது வீழ்ச்சியடைந்துள்ளது. இது கடந்த மார்ச் மாதத்தில் 53.1 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஜனவரி 2021ல் 55.5 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
எங்கு நடத்தப்பட்டது?
ஆர்பிஐ நடத்திய இந்த ஆய்வானது, கடந்த பிப்ரவரி 27 முதல் மார்ச் 8, 2021 வரை 13 முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டது. குறிப்பாக அகமதாபாத், பெங்களூரு, போபால், சென்னை, டெல்லி, குவஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்பட்டது.
எதுவும் சாதகமாக இல்லை
நுகர்வோர் நம்பிக்கையானது வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், தற்போதைய சூழ்நிலை குறியீடுகளும் அவ்வளவு சாதகமாக இல்லை. அதாவது பொருளாதாரம், வருமானம், விலைவாசி என எதுவும் சாதகமாக இல்லை. இப்படி ஒரு நிலையில் எதிர்காலமும் பிரகாசமாக தெரியவில்லை. ப்யூச்சர் எதிர்பார்ப்புகளும் இந்த காலகட்டத்தில் 117.1ல் இருந்து, 108.08 ஆக குறைந்துள்ளது.
குறைவான நம்பிக்கை
குறிப்பாக ஒட்டுமொத்த பொருளாதார நிலை, வேலை வாய்ப்பு, சூழ்நிலை மற்றும் வருமான நிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் நுகர்வோருக்கு நம்பிக்கை இல்லை. ஆக மொத்தத்தில் இந்த ஆய்வில் பதிலளித்தவர்களில், எதிர்வரும் ஆண்டிற்கான குறைந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினர். இது FEI குறியீட்டில் பிரதிபலித்தது. அதோடு தற்போதைய காலத்தில் பணவீக்கமும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்ப்பு உள்ளது.
இரண்டாம் கட்ட கொரோனா பரவல்
ஆக பலவீனமான நுகர்வோர் நம்பிக்கை மற்றும் பணவீக்க அழுத்தத்தின் மத்தியில், பொருளாதாரத்தினை இன்னும் மோசமாக்கும் விதமாக நாட்டில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் என்பது அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பல மாநிலங்களும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளன. எனினும் கடந்த ஆண்டை போல முழு லாக்டவுன் இல்லை என்பதும் சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
வட்டி விகிதம் ஆதரவளிக்குமா?
முதல் லாக்டவுன் போடப்பட்ட நிலையிலேயே, லாக்டவுனில் இருந்தே இன்னும் நாடு முழுமையாக மீண்டு வரவில்லை. இந்த நிலையில் இரண்டாம் கட்ட அலை என்ன செய்யப்போகிறதோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது. தேவைப்படும் வரை வட்டி விகிதங்களை குறைவாக வைத்திருப்பதன் மூலம், பொருளாதாரத்தை ஆதரிக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.
வேலையின்மை அதிகரிக்கலாம்
தேவைப்படும் வரை வட்டி விகிதங்களை குறைவாக வைத்திருப்பதன் மூலம் பொருளாதாரத்தினை ஆதரிக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறியிருந்தாலும், கடுமையாக லாக்டவுன் நடவடிக்கைகள் மீண்டும் வேலையின்மை அதிகரிப்பு மற்றும் வீட்டு வருமானத்தில் குறைப்புக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இழப்புக்கு வழிவகுக்கலாம்
வேலையிழப்பு என்பது வருமான இழப்புக்கு வழிவகுக்கலாம். இது பொருளாதாரத்தில் எதிரொலிக்கலாம். குறிப்பாக தேவை குறையலாம். அதோடு சுற்றுலா துறை, விருந்தோம்பல் துறை மற்றும் நீடித்த பொருட்கள் போன்ற பல துறைகளையும் பாதிக்கக்கூடும். அவை கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் லாக்டவுனுக்கு இடையே பாதிக்கலாம். எப்படி இருப்பினும் மற்றொரு மிகப்பெரிய வீழ்ச்சியில் இருந்து, கொரோனா தடுப்பூசிகளே பாதுகாப்பாக இருக்கலாம். எனினும் அது எந்தளவுக்கு கைகொடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.