இந்தியாவில் தயாரிக்கப்படும் மற்றும் விற்பனை செய்யப்படும் கார்களின் தரம் குறித்த கேள்வி நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில், மத்திய அரசு சாலை போக்குவரத்தில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையிலும், கார்களின் பாதுகாப்பை உயர்த்தும் வகையிலும் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் புதிய மாடல் கார்கள் அனைத்திலும் இனி கட்டாயம் டூயல் ஏர்பேக் கட்டாயம் பொருத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அப்போ பழைய மாடல் கார்களுக்கு..?
டூயல் ஏர்பேக் கட்டாயம்
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஏப்ரல் 1, 2021 முதல் அறிமுகம் செய்யப்படும் புதிய மாடல் கார்கள் அனைத்திலும் டூயல் ஏர்பேக் அதாவது காரை இயக்குபவருக்கும், முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் மற்றொரு நபருக்கும் கட்டாயம் ஏர்பேக் பாதுகாப்பை அளிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
பழைய கார்களுக்கு ஆகஸ்ட் 31 வரை
இதுமட்டும் அல்லாமல் ஏற்கனவே சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் பழைய மாடல் கார்கள் அனைத்திற்கு ஆகஸ்ட் 31, 2021ல் இருந்து டூயல் ஏர்பேக் பொருத்தப்பட்ட பின்பு விற்பனை செய்ய அனுமதி கொடுத்துள்ளது.
கார் விலை உயரும்
இந்த அறிவிப்பின் எதிரொலியாக இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களின் விலை 5,000 ரூபாய் முதல் 7000 ரூபாய் வரையில் சராசரியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நாள் வரையிலும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களுக்கு டிரைவர் சீட்டில் மட்டுமே ஏர்பேக் கட்டாயமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சாலை விபத்தில் பாதுகாப்பு
சாலை விபத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் உடன் இருப்பவர்களைக் காப்பாற்றுவதில் ஏர்பேக் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. 2019 ஜூலை முதல் டிரைவர் இருக்கையில் ஏர்பேக் கட்டாயம் பொருத்த வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 2 வருட இடைவேளையில் கோ பேசஞ்சர்-க்கும் ஏர் பேக் கட்டாயமாக்க மத்திய அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.