துபாய் என்ற கேட்ட உடனே நம் நினைவுக்கு வருவது உயரமான கட்டிடங்கள், காஸ்ட்லியான கார்கள், கச்சா எண்ணெய், வர்த்தக தளம் (Business Hub) போன்றவை தான். ஆனால் இனி வரும் காலகட்டத்தில் இதோடு புதிதாக ஒன்று சேரப்போகிறது.
ஆம் துபாய் அரசும், இந்திய பார்மா நிறுவனங்களும் இணைந்து துபாயில் ஹெல்த்கேர் - பார்மா ஹாப் உருவாக்க திட்டமிட்டு அதற்கான பணிகளையும், பேச்சுவார்த்தையும் துவங்கியுள்ளது. இது இந்திய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும்.
துபாய் அரசு
உலகிற்கே கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான துபாய் (UAE), தன்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பார்மா துறை பொருட்களைக் குறைக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது. ஒரு பக்கம் இறக்குமதியைக் குறைப்பது மட்டும் அல்லாமல் மறுபுறம் பார்மா துறை பொருட்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது.
பார்மா இறக்குமதி
துபாயில் தற்போது வருடத்திற்கு 4 பில்லியன் டாலர் அளவிலான பார்மா துறை சார்ந்த மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களைத் துபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில், இதன் அளவீட்டை 2022க்குள் அதாவது அடுத்த ஒரு வருடத்திற்குள் 18 சதவீதம் வரையில் குறைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
துபாய் - இந்திய கூட்டணி
இந்த இலக்கை எவ்விதமான தங்குதடையின்றிச் செய்து முடிக்கவும், இதன் மூலம் துபாய்க்கு வர்த்தகத்திற்குச் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கவும் முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாகத் துபாய் அரசு தனது நெருங்கிய வர்த்தகக் கூட்டணி நாடான இந்தியாவின் பார்மா நிறுவனங்களைத் துபாயில் பார்மா நிறுவனத்தைத் துவங்க அழைப்பு விடுத்துள்ளது.
MENA பகுதி
துபாய் - இந்திய பார்மா நிறுவன கூட்டணி மூலம் MENA பகுதியில் புதிய பார்மா - ஹெல்த்கேர் ஹாப் உருவாக்க முடிவு செய்துள்ளது. துபாயில் பார்மா - ஹெல்த்கேர் ஹாப் உருவாக்குவதன் மூலம் உலகளவில் மருந்து மற்றும் மருத்துவச் சப்ளை செயின் பிரச்சனை தீர்க்க முடியும், கொரோனா காலத்தில் இது பெரும் பிரச்சனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
துபாய் ஹெல்த் அத்தாரிட்டி - ஹமீத் அல் குதாமி
இதுகுறித்து பேசிய துபாய் ஹெல்த் அத்தாரிட்டியின் தலைவர் ஹமீத் அல் குதாமி பார்மா முதல் ஹெல்த்கேர் வரையில் பல பிரிவுகளில் இந்தியா மற்றும் துபாய் சிறப்பான இணைந்து செயல்பட முடியும் எனத் தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் துபாய் அரசு, இந்திய பார்மா நிறுவனங்களை அதிகளவில் ஈர்க்க தீவிரமாக இருப்பது அவரின் பேச்சில் தெரிகிறது.
ஹமீத் அல் குதாமி
மேலும் ஐக்கிய அரபு நாடுகளும் - இந்தியாவும் நீண்ட கால நட்புறவைக் கொண்டு உள்ளது. இத்துறையில் செய்யப்பட்டும் கூட்டணி மூலம் இரு நாடுகளுக்கும் இரு நாட்டு மக்களுக்கும் உயர்தரச் சேவை மற்றும் உயர்தர மருத்துவச் சிகிச்சையை மக்களுக்கு அளிக்க முடியும் என ஹமீத் அல் குதாமி தெரிவித்துள்ளார்.
இந்தியா சரியான தேர்வு
பார்மா உற்பத்தியில் உலகளவில் தரத்தில் இந்தியா 3வது இடத்திலும், அளவில் 14வது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களுக்குச் சிறப்பான மருத்து மற்றும் மருத்துவச் சேவையை அளித்து வந்த இந்திய பார்மா நிறுவனங்கள் துபாய் தேவையை எளிதாகப் பூர்த்தி செய்ய முடியும் என நம்பப்படுகிறது.
மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு
துபாய் வெறும் சுற்றுலா தளமோ, வர்த்தகத் தளமோ இல்லை. துபாயில் பார்மா - ஹெல்த்கேர் ஹாப் அமைப்பது மூலம் இந்திய பார்மா நிறுவனங்கள் அப்பரிக்கா மற்றும் உலகின் பிற பகுதிகளுக்கும் செல்ல இந்திய நிறுவனங்களின் வர்த்தகத்தைக் கொண்டு செல்ல முடியும். துபாய் - இந்திய பார்மா கூட்டணி மிகப்பெரிய மாற்றத்தை MENA பகுதியில் உருவாக்க முடியும்.