துபாய் எங்குத் திரும்பினாலும் வான் அளவு உயர்ந்த கட்டிடம், பணம், எண்ணெய் என உலகின் முக்கிய வர்த்தகப் பகுதியாக மாறியுள்ளது.
இதனால் துபாயில் செட்டிலாகும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெளிநாட்டவர்களின் முதலீடும், வர்த்தகம் துபாயில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இதுவரையில் துபாயில் நடந்திடாத வகையில் அதிகப்படியான தொகைக்கு ரியல் எஸ்டேட் விற்பனை நடந்துள்ளது.
துபாய்
துபாயின் மிகவும் முக்கிய மற்றும் பிரபலங்கள் அதிகளவில் முதலீடு செய்துள்ள பாம் ஜுமேரா பகுதியில் இருக்கும் ஒரு ஆடம்பர வீடு விற்பனையாகியுள்ளது. இதைவிட முக்கியமானது துபாய் நகரத்தில் இதுவரையில் யாரும் செய்திடாத அதிகப்படியான தொகைக்கு இந்த வீடு விற்பனை செய்யப்பட்டு உள்ளதால் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
673 கோடி ரூபாய்
துபாயில் 2022 ஆம் ஆண்டுத் துவக்கம் முதல் ரியல் எஸ்டேட் விற்பனை சூடுபிடித்துள்ளது, இதன் அடிப்படையில் துபாய் பாம் ஜுமேரா பகுதியில் Casa Del Sole என்னும் ஆடம்பர வில்லா ஜூலை மாதம் சுமார் 302 மில்லியன் திராஹம் அதாவது 673 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது என அல்பாகோ ப்ராபெர்டீஸ் என்னும் அறிவித்துள்ளது.
Casa Del Sole வில்லா
ஆனால் இந்த விலை உயர்ந்த வீட்டை வாங்கியவர் யார் என்ற விபரத்தை அல்பாகோ ப்ராபெர்டீஸ் நிறுவனம் சொல்ல மறுத்துவிட்ட நிலையில் யார் இந்தப் பணக்காரர் என்று தெரியாமல் உள்ளது. மேலும் இந்த 673 கோடி ரூபாயை எவ்விதமான கடனும் இல்லாமல் மொத்தமும் பணமாகக் கொடுத்து வாங்கப்பட்டு உள்ளது எனக் கூறப்படுகிறது.
பாம் ஜுமேரா பகுதி
துபாய் பாம் ஜுமேரா என்பது கடலில் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு பகுதி, வானத்தில் இருந்து பார்க்கும் போது இப்பகுதி ஒரு பேரிச்சை மரம் போலவே இருக்கும். இந்த Casa Del Sole என்னும் ஆடம்பர வில்லா பாம் ஜுமேரா பகுதியில் FrontG பகுதியிலேயே உள்ளது. இப்பகுதியை பில்லினியர்ஸ் ரோ எனச் செல்லமாக அழைக்கப்படும் பகுதியாகும்.
முகேஷ் அம்பானி
சமீபத்தில் முகேஷ் அம்பானி தனது இளைய மகனான அனந்த் அம்பானிக்கு துபாய் பாம் ஜுமேரா பில்லினியர்ஸ் ரோ பகுதியில் இருக்கும் 10 பெட்ரூம் வில்லா-வை வாங்கினார். இந்த வீட்டின் மதிப்பு 80 மில்லியன் டாலர் அதாவது 653.6 பில்லியன் டாலராகும்.
விசா மற்றும் குடியுரிமை விதிமுறை
துபாயில் சமீபத்தில் விசா மற்றும் குடியுரிமை விதிமுறைகளில் பெரிய அளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, துபாய் வெளிநாட்டவர்களுக்குக் குறிப்பாகப் பணக்காரர்களுக்கு மிகவும் விருப்பமான பகுதியாக மாறியுள்ளது. இதனால் தான் ரியல் எஸ்டேட் விற்பனை சூடுபிடித்துள்ளது மட்டும் அல்லாமல் அதிகப்படியான தொகைக்கு விற்பனை செய்யப்படுகிறது.