டெல்லி: சர்வதேச அளவில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், அந்த நாட்டின் மொத்த வர்த்தகமும் முடங்கி போயுள்ளது.
இதன் பிரதிபலனாக இந்திய வர்த்தக சந்தையிலும் அதன் தாக்கம் இருக்கலாம் என்று வர்த்தகர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் என அழைக்கப்படும் கோவிட்-19 என்ற சொல் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் தாக்குதலால் உயிரிழப்போரின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
இதுவரை உயிரிழப்பு
கொரோனா தாக்குதல் காரணமாக சீனாவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 100க்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் சீனாவில் மட்டும் இதுவரை 1,886 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 71,000 பேர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சீனா மட்டுமல்லாமல் சுமார் 28 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸால் இன்னும் பலர் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மருந்து உற்பத்தி பாதிக்கப்படும்
இந்த நிலையில் சீனாவில் முடங்கியுள்ள நிறுவனங்களின் எதிரொலியாக, இந்திய மருத்துவத் துறையும் பாதிப்புக்கு உள்ளாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் மருந்து உற்பத்தி செய்யப்படும் மூலதன பொருட்கள் சீனாவில் இருந்து கிடைக்காததால், இந்தியாவிலும் மருந்து உற்பத்தி பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
விலை கிடு கிடுவென அதிகரிப்பு
பொதுவாக பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மருந்தான பாராசிட்டமலின் விலை இந்தியாவில் 40% உயர்ந்துள்ளன. அதே நேரம் பல பாக்ட்டீரியா தொற்றுதலுக்கு பயன்படுத்தப்படும் ஆண்டிபயோடிக் அசித்ரோமைசினின் விலை 70% உயர்ந்துள்ளது என்று Zydus Cadilaவின் தலைவர் பங்கஜ் ஆர் படேல் தெரிவித்துள்ளார்.
மருந்துக்கு பற்றாக்குறை ஏற்படும்
அடுத்த மாதத்தின் முதல் வாரத்திற்குள்ளாக மருந்து துறையை மீட்டெடுக்காவிட்டால், ஏப்ரல் மாதம் முதல் மருந்து தொழில் பற்றாக்குறையை எதிர்கொள்ளக் கூடும் என்றும் பங்கஜ் தெரிவித்துள்ளார். உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்திலேயே இப்படி ஒரு பிரச்சனை எனில், இது சீனாவில் மட்டும் அல்ல, உலக நாடுகளுக்கே சவால் விடுத்துள்ளது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
சீனாதான் மூல ஆதாரம்
சீனாவினையே மூலதன பொருளுக்கு பெரிதும் நம்பியுள்ள இந்தியா, சீனா எப்போது தனது உற்பத்தியை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சீனாவில் இதுவரையிலும் நிச்சயமற்ற தன்மையே நிலவி வருகின்றனது. ஆக இந்தியா சீனாவுக்கு மாற்றாக வேறு நாடுகளை தேட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
சாமானிய மக்களை பாதிக்கும்
இதனால் இந்தியா மூலதன பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆக இந்திய மருத்துவ துறையில் நிச்சயம் இதன் தாக்கம் இருக்கலாம். ஏற்கனவே சில மருந்துகளின் விலை அதிகரித்துள்ள நிலையில், இது முக்கியமான மருந்துகளின் விலையில் எதிரொலித்தால், நிச்சயம் சாமானிய மக்களையும் பெரிதும் பாதிக்கும்.