பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒவ்வொரு துறையிலும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தினை அறிமுகப்படுத்து வருகின்றது. அந்த வகையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்ட இ-ஷ்ராம் என்ற தளத்தினை தொடங்கியுள்ளது.
இந்த தளம் யாருக்காக தொடங்கப்பட்டது? இதனால் என்ன பயன்? எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதைத் தான் இந்த கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம்.
இந்தியாவில் கட்டுமானத் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், சாலையோர விற்பனையாளர்கள் என இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சாமனியர்களின் வாழ்வாதாரத்தினை பெருக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
எதற்காக இந்த தளம்
ஆனால் பல திட்டங்களில் இடைதரகர்கள் மூலமாக மக்களை சரியாக சென்று சேருவதில்லை என்ற கருத்து பலதரப்பிலும் நிலவி வருகின்றது. அதோடு இது எந்த தரவுகளும் அரசுக்கு முழுமையாக கிடைப்பதில்லை. இதனாலேயே பெரும் தவறுகள் நடைபெறுகின்றன என்ற கருத்தும் இருந்து வருகின்றது.
இந்த நிலையில் இந்த பிரச்சனைகளை போக்கி சாமனிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த இ-ஷ்ராம் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
என்னென்ன அம்சங்கள்
இ-ஷ்ரம் என்ற இந்த தளத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவரின் பணிவிவரங்களும் இருக்கும். பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொழிலாளார்கள் எண்ணிக்கை, அவர்களுக்கான சமூக நலத்திட்டங்கள் உள்ளிட்ட பலவும் இந்த தளத்தில் இருக்கும். இது தொழிலாளர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் நேரிடையாக சென்று சேர்ப்பதற்கான ஒரு பாதையாகவும் இந்த இணைதளம் இருக்கும்.
பிரச்சனைகளை கூறலாம்?
இந்தியாவில் அரசின் இந்த தளத்தில் 38 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்களை பதிவு செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டும் அல்ல இந்த தளத்தில் 14434 என்ற டோல் ப்ரீ எண்ணும் உள்ளது. இதன் மூலம் அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவும். இந்த போர்டலில் தொழிலாளர்கள் தங்களது ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.
யாரெல்லாம் அடங்குவர்?
இதில் சிறு குறு விவசாயிகள், கூலித் தொழிலாளார்கள், மீன் பிடி தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள், முடி திருத்தும் தொழிலாளர்கள், ஆடு மாடு வளர்ப்பவர்கள், கட்டுமான தொழிலாளர்கள், தறி பட்டறை தொழிலாளர்கள், காய்கறி விற்பனையாளர்கள், நூறு நாள் பணி செய்யும் தொழிலாளர்கள், உப்பளத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், தெருவோர காய்கறி கடை வைத்திருப்போர், பேப்பர் போடுபவர்கள், ஆட்டோ ஒட்டுனர்கள், புலம் பெயர் தொழிலாளர்கள், தச்சு தொழிலாளர்கள் என நிரந்தர வருமானம் இல்லாத அனைத்து தொழிலாளர்களும் அமைப்புசாரா தொழிலாளர் பட்டியலில் தான் அடங்குவர்.
பதிவு செய்ய என்ன தேவை?
ஆதார் எண், ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், வங்கி கணக்கு விவரங்கள், வயது 16 - 59 வயதிற்குள் இருக்க வேண்டும் (27.08.1961 முதல் 26.08.2005).
இது தவிர பிறந்த ஊர், பிறந்த தேதி, சொந்த ஊர், மொபைல் எண் மற்றும் எந்த சமூகத்தினை சேர்ந்தவர் என பல விவரங்களும் கொடுக்கப்பட வேண்டும்.
எப்படி பதிவு செய்வது?
இதில் சுயமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக https://register.eshram.gov.in/#/user/self என்ற இணையதளத்தில் சென்று Self registration என்ற ஆப்சனில் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண், கேப்சா எண், EPFO, ESICல் சந்தாதாரா என்பதை கொடுத்தால், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒடிபி வரும். ஒடிபியை கொடுத்து லாகின் செய்து, தேவையான விவரங்களை பதிவிட்டு பதிவு செய்து கொள்ளலாம்.
இதுவும் உண்டு
இந்த தளத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் விபத்து காப்பீடாக 2 லட்சம் ரூபாய் PMSBY திட்டத்தின் மூலமாக பெறலாம். இது தவிர அனைத்து சமூக நலத்திட்டங்களையும் இந்த போர்ட்டல் மூலமாக பெற முடியும்.
உதாரணத்திற்கு கொரோனா போன்ற நெருக்கடியாக காலக்கட்டங்களில் மக்களுக்கு உதவ இந்த போர்ட்டல் உதவிகரமாக இருக்கும்.
இங்கும் பதிவு செய்து கொள்ளலாம்?
இது குறித்து தொழிலாளர் அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இது அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் அமல்படுத்த உதவிகரமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
இந்த இணையதளத்தில் பதிவு செய்ய இயலாதவர்கள் அருகிலுள்ள CSC( commen service centers)களில் சென்றும் பதிவு செய்து கொள்ளலாம்.