இந்தியாவில் கடந்த 3 வருடத்தில் மக்களின் வருமானத்தில் மிகப்பெரிய வித்தியாசம் உருவாகியுள்ளது. குறிப்பாக லோவர் மிடில் கிளாஸ் பிரிவில் இருந்த பல கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வந்துள்ளனர்.
இது மட்டும் அல்லாமல் பல கோடி நடுத்தர மக்களின் மாத வருமானம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் மாதம் 25000 ரூபாய் சம்பளம் வாங்கியவர்கள் தற்போது இந்தியாவின் டாப் 10 சதவீத எலைட் (Elite) மக்கள் பிரிவுகளில் வருகின்றனர்.
இந்திய மக்கள்
பொருளாதார ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய மக்களின் மொத்த வருமானத்தில் 5-7 சதவீத வருமானத்தை டாப் 1 சதவீத பணக்காரர்கள் பெற்று வரும் நிலையில், மாதம் 5000 ரூபாய்க்குக் குறைவான வருமானத்தைக் கொண்ட மக்கள் தொகை எண்ணிக்கை 15 சதவீதமாக உள்ளது.
10 சதவீத எலைட் மக்கள்
இதேபோல் மாதம் சராசரியாக 25000 ரூபாய் சம்பாதிக்கும் மக்கள் டாப் 10 சதவீத வருமானம் பெறும் பிரிவில் உள்ளனர். இந்த 10 சதவீத மக்கள் மட்டுமே இந்திய மக்களின் மொத்த வருமானத்தில் 30-35 சதவீத வருமானத்தின் பங்கீட்டாளராக உள்ளனர்.
வருமான ஏற்ற தாழ்வு
இதை விட முக்கியமாக இந்தியாவில் டாப் 10 சதவீத மக்கள் தொகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் கீழ் தட்டில் இருக்கும் 10 சதவீத மக்கள் எண்ணிக்கை சுருங்கி வருகிறது.
2015-16 தரவுகள்
மேலும் பொருளாதார ஆலோசனைக் குழு தேசிய குடும்பம் மற்றும் சுகாதார ஆய்வு (NFHS) 2015-16 தரவு அடிப்படையில் நகரம் மற்றும் கிராம மக்களின் வருமான ஏற்ற தாழ்வு மிகவும் அதிகமாக உள்ளது என உறுதி செய்துள்ளது. இதேபோல் செல்வ கணக்கெடுப்பில் 54.9 சதவீத மக்கள் கீழ்த்தட்டு பிரிவில் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
பிரதமர் மோடி
பிரதமர் மோடிக்கு பொருளாதார ஆலோசனைக் குழு சமீபத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் இந்தியாவில் அதிகரித்துள்ள வருமானப் பங்கீட்டு ஏற்றத்தாழ்வு குறித்த விரிவான விளக்கத்தை அளித்துள்ளது. மேலும் இந்த நிலையை மாற்ற சமூக முன்னேற்றம் மற்றும் அனைவருக்குமான வளர்ச்சி திட்டங்களின் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்திய குடும்பங்கள்
இந்திய மக்களுக்குப் போதுமான குடிநீர் வழங்கல், துப்புரவு வசதிகள் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் அளித்து இந்தியக் குடும்பங்களின் ஒட்டுமொத்த நிலையை மேம்படுத்துவதில் முன்னேற்றங்களைச் செய்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், வருமான சமத்துவம், வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மையில் இருக்கும் பிரச்சனையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
உலக வங்கி
சமீபத்தில் உலக வங்கி வெளியிட்ட ராய் மற்றும் வான் டெர் வீடே அறிக்கையில் இந்தியாவில் தீவிர வறுமை 2011 முதல் 2019 வரை 12.3 சதவீத புள்ளிகளால் குறைந்தாலும், 2004 மற்றும் 2011 க்கு இடையில் காணப்பட்டதை விடவும் குறைவாகவே உள்ளது. மேலும் தற்போது மத்திய அரசு 2015-16 தரவுகளை வைத்துக் கணக்கிடுகிறது. 2021-22 ஆண்டுக்கான கணக்கை எடுத்தால் இது மிகவும் மோசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.