இன்றைய விலைவாசி உயர்வுக்கு மத்தியில் மாதம் ரூ.15,000 சம்பாதிப்பவர்களை சற்று யோசித்துப் பாருங்கள்.. சாப்பாட்டுச் செலவு, வீட்டு வாடகை, போக்குவரத்து செலவு, அன்றாட செலவுகள் என இந்தத் தொகைக்குள் வாழ்க்கையை ஓட்டியாக வேண்டும். நாளுக்கு நாள் செலவுகள் அதிகரிக்கிறதே தவிர சம்பளம் உயர்ந்த பாடில்லை. இப்படி இருக்கும் குடும்பங்களுக்கு மாதாந்திர பட்ஜெட் போடுவதே பெரும் சவாலாக இருக்கிறது. அதிலும் தற்போது கேஸ் விலை, பெட்ரோல், டீசல் விலை என அனைத்தும் உயர்ந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் நீங்கள் இருக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்குத் தான் இந்த பதிவு
ரூ. 15,000 மாத சம்பளத்தை வைத்து கொண்டே கடன் இல்லாமல் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். மாதம் ரூ.50,000 சம்பாதிப்பவர்களே விலைவாசியை சமாளிக்க முடியாமல் திக்கு முக்காடி வருகின்றனர். இதில் எப்படி ரூ.15,000-த்தை வைத்துக்கொண்டு வாழ முடியும் என்று தானே யோசிக்கிறீர்கள்? இதற்கு நிதி ஆலோசகர்கள் ஒரு சிம்பிள் ஃபார்முலாவை பரிந்துரைக்கின்றனர். அதுதான் 60/30/10 ஃபார்முலா.
60/30/10 ஃபார்முலா: ஒருவருடைய வருமானம் ரூ. 15,000 என்று வைத்துக் கொள்வோம். ஃபார்முலாவின் படி ரூ. 15,000 மாத சம்பளத்தை மூன்று பிரிவுகளாக பிரிக்க வேண்டும். அத்தியாவசிய செலவுகள், விருப்பச் செலவுகள் மற்றும் சேமிப்பு. முதலில் இருக்கும் 60 என்பது அத்தியாவசிய செலவுகளை குறிக்கிறது. அதாவது ரூ. 15,000 சம்பளத்தில் 60% என்றால் ரூ.9,000. அத்தியாவசிய செலவுகளைத் தவிர்க்க முடியாது கண்டிப்பாக செய்தே ஆகவேண்டும். வருமானத்தின் பெரும் பகுதி இதற்கு தான் ஒதுக்கப்பட வேண்டும். வீட்டு வாடகை, மாதம் தோறும் வாங்கக்கூடிய மளிகை பொருட்கள், மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம், போக்குவரத்து செலவுகள், குழந்தைகளின் கல்விச் செலவுகள் போன்றவை இதில் அடங்கும்.
அடுத்ததாக ஃபார்முலாவில் இருக்கும் 30 சதவீதம் என்பது விருப்பச் செலவுகளைக் குறிக்கிறது. ரூ.15,000 சம்பளத்தில் 30 சதவீதம் என்றால் ரூ. 4,500. ஆன்லைன் ஷாப்பிங் செய்வது, குடும்பத்துடன் வெளியில் செல்வது, பண்டிகைக் காலச் செலவுகள், மொபைல் ரீசார்ஜ், பொழுதுபோக்கு செலவுகள், சின்ன சின்ன மருத்துவச் செலவுகள் போன்றவை இதில் அடங்கும். இந்தத் தொகையையும் நீங்கள் வரம்பில் வைத்திருப்பது அவசியம். இதைத் தாண்டி வெளியில் உண்பதற்கோ அல்லது பொழுதுபோக்கிற்கோ செலவு செய்யக்கூடாது.
மீதமுள்ள 10% தான் மிக மிக முக்கியம். அதாவது உங்கள் வருமானத்தில் 1500 ரூபாயை கண்டிப்பாக சேமிக்க வேண்டும். மிடில் கிளாஸ் மக்களுக்காகவே அஞ்சல் நிலையங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் ரெக்கரிங் டெபாசிட் என்று சொல்லப்படுகிற தொடர் வைப்பு நிதி திட்டம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் மாதா மாதம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம். அதற்கு உங்களுக்கு வட்டியும் தொடர்ந்து கிடைக்கும். அவசர தேவைகள் மற்றும் எதிர்கால இலக்குகளுக்கு இவற்றை பயன்படுத்தலாம்.
எனவே ரூ.15,000 சம்பளம் பெற்றாலும் உங்களுடைய வாழ்க்கையை கடனின்றி கொண்டு செல்ல முடியும். அதற்கு இதுபோன்ற பார்முலாக்களை பயன்படுத்தி பட்ஜெட் போட்டு அதன் படி நடக்க வேண்டும் இப்படி மட்டும் செய்து விட்டால் இனி பணவீக்கம் என்ன.. வேறு எந்த பண தேவைகள் இருந்தாலும் அதிலிருந்து எளிதில் தப்பித்து விடலாம்.



Click it and Unblock the Notifications