வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு – விரைவில் தொழில்நுட்ப பணிகள்

டெல்லி: இந்தியாவில் நீண்ட காலமாகவே வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற தேர்தல் ஆணைய கூட்டத்தில் இது தொடர்பான முக்கியமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்குமான அடையாள ஆவணமாக ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. இந்த ஆதார் அட்டையை நாம் நல திட்டங்கள் பெறுவது, வங்கி கணக்கு தொடங்குவது, சிம் கார்டுகள் வாங்குகள், பான் எண் பெறுவது , பாஸ்போர்ட் பெறுவது என பல செயல்களுக்கும் அடையாள ஆவணமாக பயன்படுத்தி வருகிறோம். ஆதாரை கட்டாயப்படுத்தி வாங்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் அனைத்து சேவைகளுக்கும் நாம் ஆதாரை வழங்கி கொண்டு தான் இருக்கிறோம்.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு – விரைவில் தொழில்நுட்ப பணிகள்

இதற்காகவே தனித்துவ அடையாள அமைப்பான UIDAI மாஸ்குடு ஆதார் என்ற வசதியையும் ஏற்படுத்தி தந்துள்ளது. இந்த சூழலில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் திட்டத்தை தேர்தல் ஆணையம் கையில் எடுத்துள்ளது. தலைநகர் டெல்லியில் தேர்தல் ஆணைய தலைமையகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மற்றும் மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த மோகன், தனித்துவ அடையாள அமைப்பு அமைப்பான UIDAI-இன் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கான பணிகளை தொடங்க இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக UIDAI மற்றும் தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து ஆலோசனை நடத்தி தக்க முடிவினை எடுப்பார்கள் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 326 வது பிரிவின்படி இந்திய குடிமகன்களுக்கு வாக்களிக்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது. அத்தகைய சூழலில் ஆதார் அடையாள அட்டை தான் தற்போது முக்கியமான அடையாள ஆவணமாக இருப்பதால் அதனை வாக்காளர் அட்டையுடன் இணைப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

முன்னதாக ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் தேர்தல் ஆணையத்தின் நோக்கம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ் கட்சி இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பங்குதாரர்களிடமும் கட்டாயம் ஆலோசனை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் தகுதி வாய்ந்த எந்த ஒரு வாக்காளருக்கும் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படாமல் அவருக்கான பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

ஆதார் அட்டையை பொறுத்தவரை ஒரு நபருக்கான அடையாள ஆவணமாக தான் செயல்படுகிறது, ஆனால் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு 18 வயது பூர்த்தி அடைந்து வாக்காளர் அடையாள அட்டை பெற்று வாக்காளர்கள் பட்டியலில் அவர்களின் பெயர் இடம்பெற வேண்டும். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையும் ஆதாரையும் இணைக்க முடிவு செய்துள்ளது. அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டும் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கலாம் என்ற முடிவு 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே தேர்தல் ஆணையத்தால் எடுக்கப்பட்டது. அப்போது வாக்காளர் பட்டியலில் போலியான நபர்களின் பெயர்களை நீக்குவதற்கும் ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் இருப்பதை சரி பார்த்து நீக்குவதற்கும் தேர்தல் ஆணையம் ஆதாரையும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணையும் இணைப்பது என முடிவெடுத்தத.

இதற்காக தேர்தல் ஆணையம் சார்பாக தேசிய வாக்காளர் பட்டியல் சரிப்படுத்துதல் மற்றும் அங்கீகார திட்டம் என்ற பெயரில் ஒரு திட்டமும் தொடங்கப்பட்டது. இதன் மூலம் மூன்றே மாதங்களில் 300 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்களின் அடையாள அட்டைகளும் ஆதார் எண்களும் இணைக்கப்பட்டன. ஆனால் இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை அடுத்து 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் பான் எண்ணுடன் இணைப்பது ஆகியவற்றுக்காக மட்டுமே ஆதாரை கட்டாயமாக கேட்க வேண்டும் , மற்ற சேவைகளுக்கு ஆதாரை வழங்க மக்கள் முன் வந்தால் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தது. இதன் காரணமாக தேர்தல் ஆணையம் அந்த திட்டத்தையே கைவிட்டது.

இதனிடையே பல்வேறு அரசியல் கட்சிகளும் பல்வேறு மாநிலங்களில் போலி வாக்காளர்கள் இடம்பெற்று இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணம் இருக்கின்றன. இந்த சூழலில் தான் தேர்தல் ஆணையம் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பை மீண்டும் கையில் எடுக்க இருக்கிறது. முன்னதாக மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியிருந்தது. அதாவது பலருக்கும் போலியான வாக்காளர் அடையாள எண்கள் வழங்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டை எழுப்பியிருந்தது.

திருமணம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றுக்கு இடம்பெயர்பவர்கள் பலரும் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையை மாற்றுவது கிடையாது. அதாவது ஏற்கனவே இருக்கும் தொகுதியிலும் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும், புதிதாக சென்றிருக்கும் பகுதியிலும் அவர்கள் புதியதாக விண்ணப்பம் செய்து வாக்காளர் அட்டை பெற்றிருப்பார்கள். இதனால் ஒரே நபருக்கு இரண்டு இடங்களில் வாக்காளர் அட்டையும், வாக்களிக்கும் உரிமையும் கிடைத்துவிடுகிறது. சிலர் இதனை தவறாகவும் பயன்படுத்துகின்றனர்.

எனவே தான் தேர்தல் ஆணையம் ஆதாரையும் வாக்காளர் அட்டையையும் இணைத்தால் இந்த பிரச்சனைக்கு தீர்வு வந்து விடும் என எண்ணுகிறது. தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை தாமாக முன் வந்து விருப்பம் தெரிவிப்பவர்களிடம் இருந்து ஆதார் எண்ணை பெற்று அதனை வாக்காளர் அட்டையுடன் இணைத்து வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து மக்களிடம் இருந்து அவர்களின் அனுமதி பெற்று ஆதாரையும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணையும் இணைக்கும் பணிகளை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது.

ஆனால் இந்த இரண்டு தரவு தளங்களையும் இணைக்காமல் தேர்தல் ஆணையம். தற்போது அது தொடர்பான தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகள் தான் நடைபெற இருக்கின்றன. இவ்வாறு இரண்டு தரவு தளங்களும் இணைக்கப்பட்டால் ஒரே நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்கு இருந்தால் அது கண்டறிந்து நீக்குவது எளிதாகிவிடும். ஆனால் இந்த பணிகள் அதிகாரப்பூர்வமாக எப்போது தொடங்கும் என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை. இருந்தாலும் தேர்தல் ஆணையம் இதில் தீவிரமாக இருப்பது உறுதியாகியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+