டெல்லி: ஒரு புறம் மத்திய நிதியமைச்சர் பொருளாதாரம் மந்தநிலையில் இல்லை. சற்று தேக்க நிலையில் தான் உள்ளது என்று சற்று ஆறுதல் தரும் விதமாக கடந்த புதன்கிழமையன்று மாநிலங்களவையில் தில்லாக பேசினார்.
இதனால் சற்றே ஆறுதல் அடையலாம் என்றால், மறுபுறம் பல பொருளாதார நிபுணர்கள் ஜிடிபி குறித்த கணிப்புகள் பயமுறுத்தும் விதமாகவே இருக்கிறது. அதிலும் செப்டம்பர் காலாண்டில் ஜிடிபி விகிதம் 4.2 சதவிகிதம் முதல் 4.7 சதவிகிதம் வரையில் தான் இருக்கும் என்று கணித்துள்ளன.
சற்று முன்பு வெளியிடப்பட்ட ஜிடிபி விகிதமானது, நிபுணர்கள் கணித்தது போலவே ஜிடிபி விகிதம் 4.5 சதவிகிதமாக சரிவடைந்துள்ளது. இதே போல் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி 5.8 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டிலேயே ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், செப்டம்பர் காலாண்டில் அதைவிட குறைந்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் வரவிருக்கும் டிசம்பர் 3-5 தேதிகளில் நடக்கவிருக்கும், ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் மேலும் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
பொருளாதார நிபுணர்கள் கூறியவாறு, கடந்த முதல் காலாண்டில் ஏற்றத்தில் இருந்த சில துறைகளும், செப்டம்பர் காலாண்டில் சரிவில் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக எரிபொருள், ஏற்றுமதி, இறக்குமதி, நிலக்கரி, ஆட்டோமொபைல் துறை, ஸ்டீல் துறை என பல துறைகள், கடந்த ஜூன் காலாண்டில் இருந்ததை விட வீழ்ச்சி கண்டுள்ளது. இது தவிர வேகமாக நுகரக்கூடிய நுகர்வோர் பொருட்களின் நுகர்வும் குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நேரத்தில் தான் பணவீக்கமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சில்லறை பணவீக்கம் விகிதம் அதிகளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருளான வெங்காயத்தின் விலையானது 150 ரூபாயை தொட்டுள்ளது. இது இன்னும் எந்த அளவுக்கு செல்லும் என்றும் தெரியவில்லை. இது மேலும் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த நேரத்தில் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் அரசின் இலக்கினை விட தாண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் - அக்டோபர் வரையிலான நடப்பு கணக்கு பற்றாக்குறை 102.4% அதிகரித்துள்ளது. இந்த விகிதமானது முழு ஆண்டுக்குமான இலக்கினை தற்போதே கடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது மத்திய அரசுக்கு மேலும் கவலை அளிக்கும் விதமாகவே இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
இது கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 7.2 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முன்பு 6.48 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எனினும் பட்ஜெட்டில் இதன் இலக்கு 7.03 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு புறம் உள்நாட்டில் இப்படி எனில் அமெரிக்கா சீனா வர்த்தக போரும் இதுவரை ஓய்ந்ததாக தெரியவில்லை. எனினும் விரைவில் இந்த ஒப்பந்தம் போடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த தீவிரமான பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்ய, அரசு எடுத்து வரும் தீவிரமான நடவடிக்கைகள் விரைவில் களையப்படலாம் என்றும் கருதப்படுகிறது. இதனால் தற்போது இந்த விகிதம் குறைந்தாலும் அடுத்து வரும் காலாண்டுகளில் இது மீண்டு எழலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.