கொரோனாவால் பாதித்த இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடையத் துவங்கினாலும் வளர்ச்சியின் வேகம் மிகவும் குறைவாகவே உள்ளது. ஜூன் காலாண்டில் -23.9 சதவீதமாக இருந்த இந்திய ஜிடிபி செப்டம்பர் காலாண்டில் -7.5 சதவீதமாக உயர்ந்துள்ளது இது மகிழ்ச்சி அடைய வேண்டிய விஷயமாக இருந்தாலும், மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டி விஷயமாக உள்ளது.
இந்திய பொருளாதாரம் இந்த 2 காலாண்டில் தடாலடியாக உயர்ந்திருந்தாலும், இது தொடர்ந்து தாக்குப் பிடிக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.
டிசம்பர் 2017
இந்திய பொருளாதாரம் தற்போது டிசம்பர் 2017 அளவீட்டை மட்டுமே அடைந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் 3 வருடத்திற்குப் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தைக் கொரோனாவுக்கு முன்பிருந்த அளவீட்டை அடைவதற்கும், வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கும் அதிகளவிலான வளர்ச்சி திட்டங்கள் தேவை.
செப்டம்பர் 2019
ஜூன் காலாண்டின் -23.9 சதவீத பொருளாதாரச் சரிவில் இருந்து இந்திய ஜிடிபி செப்டம்பர் காலாண்டில் -7.5 சதவீதமாக வளர்ச்சி அடைந்திருந்தாலும், செப்டம்பர் 2019 அளவீட்டை இன்னும் அடையவில்லை. இதனால் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சி இன்னும் இயல்பான நிலைக்கு வரவில்லை என்பது விளங்குகிறது.
வகைப்படுத்தப்பட்ட துறை
தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள பொருளாதாரத் தரவுகள், உற்பத்தி தரவுகள், வேலைவாய்ப்புகள் தரவுகள் அனைத்தும் வகைப்படுத்தப்பட்ட துறையைச் சார்ந்தது மட்டும்.
இந்தியாவில் வகைப்படுத்தப்படாத அதாவது Unorganised sector துறையின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரச் சந்தை மிகவும் அதிகம். இத்துறையின் தரவுக்குப் பொதுவாகக் காலதாமதமாகவே வரும் என்பதால் தற்போது வெளியாகியுள்ள தரவுகளோடு வகைப்படுத்தப்படாத துறை தரவுகளைச் சேர்க்கும் போது இந்த அளவீட்டில் பெரிய அளவிலான மாற்றம் இருக்கும்.
6 மாதம்
இந்நிலையில் 2020ஆம் நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவீடு என்பது -15.7 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் டிசம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி வைத்தே இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சியைக் கணிக்க முடியும்.
தற்போது வெளியான கணிப்புகளின் படி 2020ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் இரண்டு இலக்க சரிவில் இருக்கும் எனத் தெரிவித்து இருந்தது.
பல காலாண்டுகள்
தற்போதைய பொருளாதார நிலையைப் பார்க்கும்போது நாட்டின் பொருளாதாரம் பாதிப்புகள் இன்னும் பல காலாண்டுகளுக்குத் தொடரும் எனக் கணிக்கப்படுகிறது.
இதுமட்டும் அல்லாமல் செம்படம்பர் காலாண்டில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியைத் தொடர மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும் என நிதிமைச்சகம் வெளியிட்ட டிவீட்டில் தெரிவித்துள்ளது.