இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்புகளைப் பார்க்கும்போது, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறையும் காலமும் சரி, இந்தியா மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் காலமும் சரி மிகவும் அதிகமாக இருக்கும் எனத் தனியார் முதலீட்டாளர்கள் கணித்துள்ளனர்.
அதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் நோய்த் தொற்றைவிடவும் பசி பட்டினியால் அதிகளவில் இறக்கக் கூடும் நிலையும் உள்ளது. கொரோனாவின் பாதிப்புகள் குறித்து இன்னும் மக்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்க்கப்படவில்லை என்பது தான் தற்போது மிகப்பெரிய பிரச்சனை என்றும் கூறியுள்ளனர்.
சிகோயா கேப்பிடல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் Shailendra Singh கூறுகையில், இந்திய மக்களுக்குக் கொரோனா குறித்து உண்மையான பாதிப்புகள் இன்னும் தெரியவில்லை, இதே நிலை தொடர்ந்தால் நாட்டில் கொரோனாவால் மக்கள் இறப்பதை விடவும் பசியால் அதிகமானோர் இறப்பது அதிகமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் Shailendra Singh கூறுகையில், நாங்கள் முதலீடு செய்துள்ள நிறுவனங்களிடம் 5 முக்கியக் காரணிகளை வைத்து வர்த்தகத்தை எப்படிக் காப்பாற்றிக்கொள்வது என்பதை இப்போதே திட்டமிடுங்கள் என அறிவுறுத்தியுள்ளோம். நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் அதிர்ச்சி அடையும் அளவிற்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரம் தற்போது ஏற்பட்டுள்ள சரிவில் இருந்து மீண்டு வரும் நிலையின் ஆரம்பமே நடப்பு நிதியாண்டில் 3வது அல்லது 4வது காலாண்டில் தான் துவங்கும் எனத் தெரிவித்துள்ளார்.
அதுமட்டும் அல்லாமல் கொரோனா மீண்டு வந்தாலும், அனைத்து நாடுகளும் உள்நாட்டுத் தேவைக்குத் தான் அதிகளவிலான முக்கியத்துவம் கொடுக்கும், இதனால் சர்வதேச சந்தை தாக்கத்தில் இருந்து பெரிய அளவிலான மாற்றம் இந்தியாவில் ஏற்படாது என்றும் Shailendra Singh கூறியுள்ளார். மேலும் அனைத்து நாடுகளிலும் துவக்கத்தில் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி துறைகள் தான் விரைவில் மீண்டு வரும், அதன் பின்பு தான் சேவை மற்றும் இதர துறைகள்.