இந்திய பொருளாதாரத்தை 2020ல் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு வந்த நிலையில் செப்டம்பர் மாதம் லாக்டவுன் தளர்வுகள் அதிகமாக அறிவிக்கப்பட்டதன் வாயிலாகவும், விழாக்கால விற்பனை சூடுபிடித்துள்ள காரணமாகவும் கணிசமான வளர்ச்சி அடைந்து வந்தது.
இந்நிலையில் நவம்பர் மாதம் இந்தியப் பொருளாதார வளர்ச்சியைக் கணிக்கப் பயன்படும் 16 முக்கியக் காரணிகளில் 9 காரணிகள் சரிவில் இருக்கும் காரணத்தால் நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதாகக் கணிக்கப்பட்டு உள்ளது.
இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் 2020ல் மார்ச் மாதத்தில் இருந்து ஒப்பிடுகையில் நவம்பர் மாதம் தான் சிறப்பான வளர்ச்சியை இந்தியா பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் நுகர்வோர் பொருளாதாரம், உற்பத்தி பொருளாதாரம், பிற துறை பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம் அடிப்படையில் சுமார் 16 முக்கியக் காரணிகளைக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் வலிமை தன்மையைக் கணக்கிட முடியும்.
நுகர்வோர் பொருளாதாரத்தில் பயணிகள் வாகனம் மற்றும் டிராக்டர் விற்பனை விழாக்கால விற்பனை முடிந்த பின்பும் சிறப்பாக உள்ளது. லாக்டவுன் காலத்தில் முதன்முதலாக வளர்ச்சி அடைந்த இரண்டு முக்கியக் காரணிகளும் இதுதான். கடந்த வருடத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையை விடவும் இந்த ஆண்டு குறைவாக இருந்தாலும், மார்ச் மாத சரிவில் இருந்து பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நுகர்வோர் பொருளாதாரப் பிரிவில் பயணிகள் வாகனம் மற்றும் டிராக்டர் விற்பனை காரணிகள் வளர்ச்சிப் பாதையில் இருக்கும் நிலையில் பிராண்ட்பேன்ட் வாடிக்கையாளர் எண்ணிக்கை காரணியும், உள்நாட்டு விமானப் பயணிகள் காரணியும் சரிவில் உள்ளது.
உற்பத்தி பொருளாதாரத்தில் பிஎம்ஐ காம்போசிட், ரயில் பயணிகள் காரணிகள் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் கோர் பிரிவின் வளர்ச்சியும், உணவு அல்லாத வங்கிக் கடன் அளவும் சரிந்துள்ளது.
மேலும் சிபிஐ, கோர் சிபிஎம், கிராமப்புற ஊதிய உயர்வு, வேலைவாய்ப்பு, ரூபாய் மதிப்பு என மக்களை நேரடியாகப் பாதிக்கும் அனைத்து முக்கியக் காரணிகளும் சரிவில் உள்ளது.
இந்தத் தரவுகள் மூலம் விழாக்கால வர்த்தகச் சந்தைக்குப் பின் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் மந்தமான நிலையிலேயே இருப்பது தெளிவாகியுள்ளது. அக்டோபர் தரவுகளை ஒப்பிடுகையில் பெரிய அளவிலான வளர்ச்சி இல்லை என மின்ட் மேக்போ டிராக்கர் தரவுகள் கூறுகிறது.