இந்தியாவினை பொறுத்தவரையில் நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் பல்வேறு நிறுவனங்கள் தங்களது பொது பங்கு வெளியீட்டினை செய்துள்ளன.
இந்த நிதி திரட்டலானது 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகம் என ஆய்வறிக்கையில் சுட்டி காட்டப்பட்டுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், கடந்த ஏப்ரல் - நவம்பர் மாதங்களில் 75 நிறுவனங்கள் தங்களது பங்கினை வெளியிட்டுள்ளன.
10 ஆண்டுகளில் இல்லாத சம்பவம்
இதன் மூலம் 75 நிறுவனங்களும் 89,066 கோடி ரூபாய் நிதியினை திரட்டியுள்ளன. இது 2020ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் வெறும் 14,733 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. இவ்வாறு திரட்டப்பட்ட நிதியானது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகம் என பொருளாதார ஆயவறிக்கையானது கூறுகின்றது.
பொருளாதார வளர்ச்சி
மேலும் கார்ப்பரேட் துறையின் இந்த அபரிதமான வளர்ச்சி விகிதமானது, நீண்டகால நோக்கில் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
நிறுவனங்கள் ஐபிஓ மூலம் மட்டும் அல்ல, முன்னுரிமை பங்கு வெளியீடு மூலமாகவும் நிதியினை திரட்டியுள்ளன. இது கடந்த ஏப்ரல் - நவம்பர் வரையிலான எட்டு மாத காலங்களில், 43,004 கோடி ரூபாயாக இருந்தது. இது முந்தைய ஆண்டில் 25,701 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய நிறுவனங்கள் நுழைவு
மொத்தத்தில் நடப்பு நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் முதன்மை சந்தையில் இருந்து நிறுவனங்கள் 1.81 லட்சம் கோடி ரூபாய் நிதியினை திரட்டியுள்ளன. இதே முந்தைய ஆண்டில் 1.72 லட்சம் கோடி ரூபாய் நிதியினை திரட்டியுள்ளன. குறிப்பாக இந்த நிதி திரட்டலில் புதிய புதிய நிறுவனங்கள் இருந்தன. குறிப்பாக இந்த காலக்கட்டத்தில் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சந்தையில் நுழைந்தன.
சில்லறை வர்த்தகம்
மேலும் நடப்பு நிதியாண்டில் பங்கு சந்தையில், சில்லறை வர்த்தகம் என்பது கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் ஆய்வறிக்கை கூறியுள்ளது. என் எஸ் இ-யின் தரவுகளை சுட்டிக் காட்டிய ஆய்வு, கடந்த 2019- 20ல் 38.8% ஆக இருந்த சில்லறை முதலீட்டாளர்களின் விகிதம், நடப்பு ஆண்டில் 44.7% அதிகரித்துள்ளது.