Economic Survey: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ள அறிக்கை, சில்லறை பணவீக்க விகிதமானது, ரிசர்வ் வங்கியின் இலக்கினை எட்டியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளது.
கடந்த ஏப்ரல் 2022ல் இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதமானது 7.8% ஆக இருந்தது. இது ரிசர்வ் வங்கியில் அதிகபட்ச இலக்கான 6% மேலாக இருந்தது.
இதற்கிடையில் தான் ரிசர்வ் வங்கியானது இலக்கிற்குள் பணவீக்கத்தினை கொண்டு வர, தொடர்ந்து வட்டி விகிதத்தினை உயர்த்தி வருகின்றது.
பணவீக்கம் சரிவு
இதன் பலனாக படிப்படியாக பணவீக்க விகிதமும் சரிவினைக் எட்ட தொடங்கியுள்ளது. மேலும் அரசின் ஊக்குவிப்பு நடவடிக்கையும் தொடர்ந்து பணவீக்க விகிதம் குறைய காரணமாக அமைந்தது.
ரிசர்வ் வங்கி இந்தியாவில் பணவீக்க விகிதம் நடப்பு ஆண்டில் 6.8% ஆக இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளது.
உலகளாவிய பணவீக்கம்
சர்வதேச அளவில் உலகளாவிய நாடுகள் பலவும் பணவீக்கத்தினால், பெரிய அளவிலான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றன. அவற்றின் பணவீக்கம் என்பது பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை எட்டியுள்ளது. அதனுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் பணவீக்கம் என்பது பரவாயில்லை என்றாலும், இதனை குறைக்க அரசும், மத்திய வங்கியும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.
பணவீக்கம் எப்படியிருக்கும்?
பொருளாதார ஆய்வறிக்கையிலும், ரிசர்வ் வங்கியின் மதிப்பீடான 6.8% ஆக பணவீக்கம் இருக்கும் என கணித்துள்ளது. இது ரிசர்வ் வங்கியின் இலக்கிற்கு வெளியே உள்ளது. இது தனியார் நுகர்வினை குறைக்கலாம். எனினும் முதலீட்டினை குறைக்கும் அளவுக்கு பலவீனமாக இல்லை எனவும் சுட்டிக் காட்டியுள்ளது.
வட்டி குறையலாம்
பணவீக்கம் குறைந்து வரும் நிலையில் இது கடன்களுக்கான வட்டி விகிதத்தினை குறைக்க வழிவகுக்கலாம். இதன் காரணமாக மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை குறைக்கலாம். இதனால் பெரு நிறுவனங்களுக்கான கடன் வட்டி விகிதமும் குறையலாம். இது சில்லறை கடனுக்கான தேவையையும் அதிகரிக்கும். இது தேவையை அதிகரிக்க வழிவகுக்கும். இதன் காரணமாக வளர்ச்சியும் அதிகரிக்கும் என மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளது.
வரி குறைப்பு
அது மட்டும் அல்ல, ஆய்வறிக்கையில் விலைவாசி உயர்வினை குறைக்க, மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததையும் சுட்டிக் காட்டியுள்ளது.
குறிப்பாக எரிபொருள் விலையை குறைக்க அரசு வரியை குறைத்தது, முக்கிய மூலதன பொருட்களுக்கான வரியை குறைத்தது, இரும்பு தாது உள்ளிட்ட சிலவற்றிற்கு வரியை 30%ல் இருந்து 50% ஆக அதிகரித்தது.
ஏற்றுமதி தடை
இது தவிர கோதுமை ஏற்றுமதிக்கு தடை, அரிசிக்கு தடை விதித்தது, பாமாயில், கச்சா மற்றும் சோயாபீன்ஸ் எண்ணெய், சன்பிளவர் ஆயில் என பலவற்றிற்கும் அடிப்படை வரியை குறைத்தது. இது மேற்கொண்டு இந்தியாவில் விலைவாசி குறைய முக்கிய காரணமாகவும் அமைந்தது.