சாமானிய மக்கள் முதல் பெரும் நிறுவனங்களின் தலைவர்கள் வரையில் அனைவரும் எதிர்பார்க்கும் 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை நாளை வெளியிட உள்ள நிலையில், இன்று துவங்கும் பட்ஜெட் கூட்டத்தில் மத்திய அரசு மிகவும் முக்கியமான பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடுகிறது.
பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கை எப்படி இருக்கும் என்பதற்கான துவக்க புள்ளி தான் இந்தப் பொளுதாரா ஆய்வறிக்கை.
பொருளாதார ஆய்வறிக்கை
மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 2021-22ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், அடுத்த நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கும் எனத் தெரிகிறது. இதன் மூலம் ஆசியாவின் 3வது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் இந்தியப் பொருளாதாரம் சரிவில் இருந்து முழுமையாக மீளும் எனத் தெரிகிறது.
பொருளாதார வளர்ச்சி
கடந்த பொருளாதார ஆய்வறிக்கையில் இந்தியாவின் பொருளாதாரம் 11 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் எனக் கணிக்கப்பட்டது, கொரோனா முதல் அலையில் இருந்து மீண்டு வந்த நிலையில் இந்த 11 சதவீத வளர்ச்சி சாத்தியம் எனத் தெரிந்தது, ஆனால் 2வது அலை, ஒமிக்ரான், வர்த்தக மந்த நிலை ஆகியவை நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சியைக் குறைத்துள்ளது.
வர்த்தகம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம்
நடப்பு நிதியாண்டிலும், அடுத்த நிதியாண்டிலும் உலகிலேயே வேகமாக வளர்ச்சி அடையும் பொருளாதார நாடாக இந்தியா விளங்கும் எனப் பல அமைப்புகள் அறிவித்துள்ள வேளையில், இன்று வெளியாகும் பொருளாதார ஆய்வறிக்கை, நாளை வெளியாகும் பட்ஜெட் அறிக்கை நாட்டின் வர்த்தகம், வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சியை முடிவு செய்யும்.
தலைமை பொருளாதார ஆலோசகர்
இன்று வெளியாக இருக்கும் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் தலைமையிலான குழு ஆய்வு செய்து உருவாக்கியுள்ளது. மேலும் இந்தப் பொருளாதார ஆய்வறிக்கையில் அனைவரும் கவனிக்க வேண்டியது அடுத்த நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி அளவீடு தான்.
வி ஆனந்த நாகேஸ்வரன்
மத்திய அரசு பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் பட்ஜெட்டை வெளியிடுவதற்கு முன்பு புதிய தலைமை பொருளாதார ஆலோசகர் பெயரை வெளியிட்டுள்ளது. தலைமை பொருளாதார ஆலோசகர் பதவியில் இருந்த கேவி சுப்பிரமணியன் டிசம்பர் 2021ல் தனது 3 வருட பணிக்காலம் முடித்துவிட்டு இப்பொறுப்பில் இருந்து வெளியேற உள்ளதாக அறிவித்த நிலையில் புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக வி ஆனந்த நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டு உள்ளார்.