மும்பை: 2008ஆம் ஆண்டுக்கு பிறகு, முதல் முறையாக, இந்தியாவின் மிக பிஸியான இரண்டு முக்கிய விமான நிலையங்களில், பயணிகள் கூட்டம் குறைந்துவிட்டது, என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் தலைநகர் டெல்லி மற்றும் வர்த்தகத் தலைநகர் மும்பை ஆகிய இரு நகரங்களிலும் உள்ள முக்கியமான விமான நிலையங்களில், முதல் முறையாக ஒரு தசாப்தத்திற்கு பிறகு இப்படியான நிகழ்வு நடந்தேறியுள்ளது.
இந்தியாவில் உள்ள பொருளாதார மந்த நிலைதான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள் வருகை சிறிது அதிகரித்து இருந்தது. அதே நேரம் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் வருகையும் குறைவாகவே காணப்படுகிறது.
இரு வருடங்கள்
2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகள் அடிப்படையிலான ஒப்பீட்டில், இந்த தகவல் தெரியவந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 1.8 கோடி பயணிகள் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளனர். 2019ஆம் ஆண்டு 1.9 கோடி சர்வதேச பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர். இது வெறும் 0.6% உயர்வு.
வீழ்ச்சி
2018 ஆம் ஆண்டு டெல்லி விமான நிலையத்தில் 5.2 கோடி உள்நாட்டு பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஆனால் 2019ஆம் ஆண்டு 4.9 கோடி உள்நாட்டு பயணிகள் தான் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது 6 சதவீதம் வீழ்ச்சி.
மும்பை விமான நிலையம்
2018 ஆம் ஆண்டு மும்பை விமான நிலையத்தில், 3.50 கோடி உள்நாட்டு விமான பயணிகள் பயணம் மேற்கொண்டனர். ஆனால் கடந்த ஆண்டு 3.38 கோடி பேர் மட்டுமே பயணம் மேற்கொண்டனர். சர்வதேச பயணிகளை பொறுத்தளவில் 2018 ஆம் ஆண்டு மும்பை விமான நிலையத்தில் இருந்து 1.4 கோடி பேர் பயணித்த நிலையில் கடந்த ஆண்டு 1.3 கோடி பேர் மட்டுமே பயணித்தனர் இது 7 சதவீத வீழ்ச்சி.
பொருளாதாரம்
பொருளாதாரத்தில் மந்தநிலை நீடிப்பதால் வணிகர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் அல்லது சுற்றுலாப் பயணிகளும் இவ்விரு விமான நிலையங்களுக்கும் அடிக்கடி வந்து செல்வது குறைந்து இருக்கிறது. எனவே விமானத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள். நாட்டின் முதல் இரு பெரிய நகரங்களான டெல்லி மற்றும் மும்பை ஆகியவற்றில் விமான பயணிகள் எண்ணிக்கை குறைந்திருப்பது பொருளாதாரம் மோசமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான மற்றொரு அளவீடாக சொல்லப்படுகிறது. 11 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் முதல் முறையாக இந்த அளவுக்கு பயணிகளின் எண்ணிக்கை இவ்விரு விமான நிலையங்களிலும் குறைந்துள்ளதாம்.