சமையல் எண்ணெய் விலை பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஜூன் மாதம் முதல் குறையும் என நம்புவதாக அதானி விலமர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான ஆங்ஷு மல்லிக் கூறியுள்ளார்.
இந்தியா ஆண்டுதோறும் அதன் சமையல் எண்ணெய் நுகர்வில் 55 சதவீதத்துக்கும் அதிகமாக இறக்குமதியைத்தான் நம்பியுள்ளது. அதில் 7.2 மில்லியன் டன் பாமாயில் இந்தோனேசியாவில் இருந்தும் 5.4 மில்லியன் டன் மலேசியாவில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது.
பாமாயில் ஏற்றுமதி தடை
சமீபத்தில் இந்தோநேஷியா பாமாயில் ஏற்றுமதியைத் தடை செய்ததும், ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் காரணமாகவும் சமையல் எண்ணெய் விலை பிப்ரவரி மாதம் முதல் உயர்ந்து வருகிறது. இப்போது இந்த பிரச்சனை குறைந்து வருகிறது. எனவே எப்போது விலை குறையும் என்பது கேள்வியாக உள்ளது.
இந்தோனேசியா
இந்தோனேசியாவில் தேவைக்கு அதிகமாக பாமாயில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதியாகிறது. அவர்களிடம் அதை சேமித்து வைக்க போதிய வசதிகள் இல்லை. அதிகபட்சம் 15 நாட்களுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் பாமாயில் ஏற்றுமதியைத் தொடங்குவார்கள். என்னை பொறுத்தவரையில் மே 10-ம் தேதி இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதியை மீண்டும் தொடங்க அதிக வாய்ப்புள்ளது.
எப்போது விலை குறையும்?
மே 10-ம் தேதிக்கு பிறகு இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதி மீதான தடை நீக்கினால் ஜூன் மாத இறுதியில் சமையல் எண்ணெய் விலை 10 முதல் 15 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது என ஆங்ஷு மல்லிக் கூறியுள்ளார்.
அதானி வில்மர்
ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் அதானி வில்மர் நிறுவனத்தின் சமையல் எண்ணெய் விலை 30-35 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
2021-2022 நிதியாண்டில் அதானி வில்மர் நிறுவனத்தின் லாபம் 26 சதவீதம் அதிகரித்து 804 கோடி ரூபாயாக உள்ளது. வருவாய் 46 சதவீதம் உயர்ந்து 54,214 கோடி ரூபாயாக உள்ளது. நடப்பு நிதியாண்டில் எண்ணெய் வணிகத்தில் 6 முதல் 8 சதவீத வளர்ச்சியும், பேக் செய்யப்பட்ட உணவு வணிகத்தில் 30 சதவீத வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்கு நிலவரம்
சமீபத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானி விலமர் பங்குகளின் விலை 200 சதவீதம் அதிகரித்து 716 ரூபாய் பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.