டெல்லி : இந்தியாவில் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சியானது கடந்த மே மாதத்தில் 23.4% வீழ்ச்சி கண்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது கடந்த மே 2019-ல் 3.8% ஏற்றம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது என வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் செவ்வாய்கிழமையன்று அறிவித்துள்ளது.
கொரோனாவினால் ஒட்டுமொத்த பொருளாதாரமும் மந்த நிலையில் இருக்கும் இந்த நிலையில், இந்தியாவின் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி வீழ்ச்சி கண்டுள்ளது தெரிந்த விஷயம் தான் என்றாலும், இது இத்தோடு முடிந்தால் சரியே என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நெருக்கடியான நேரத்தில் உரத்தினை தவிர, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமெண்ட், நிலக்கரி, மின்சாரம், உருக்கு துறை, பெட்ரோலிய சுத்திகரிப்பு உள்ளிட்ட மற்ற ஏழு துறைகளும் எதிர்மறையான வளர்ச்சியினையே பதிவு செய்துள்ளன.
ஏப்ரல் முதல் மே வரையிலான காலத்தில் இத்துறைகளின் வளர்ச்சியானது 30 சதவீதம் குறைந்துள்ளதாக இந்த வர்த்தக அறிக்கைகள் கூறுகின்றன. இதே முந்தைய ஆண்டு இதே காலப்பகுதியில் 4.5 சதவீதமாக இருந்தது எனவும் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கொரோனாவின் காரணமாக மேற்கொண்டு வைரஸினை பரவாமல் தடுக்கும் விதமாக நாடு தழுவிய லாக்டவுன், கிட்டதட்ட 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. இதன் காரணமாக நிலக்கரி, சிமெண்ட், இருப்பு, இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், கச்சா எண்ணெய் உள்ளிட்ட துறைகள் உற்பத்தி இழப்பினை சந்தித்தன.
அதோடு ஐஐபி எனப்படும் தொழில் துறை குறியீடானது 40.27 சதவீதமாகவும் வந்துள்ளது.
மே மாதத்திலேயே இப்படி எனில் இனி வரும் மாதங்களில் இந்த உற்பத்தி விகிதங்களானது எப்படி இருக்கும் என்ற கேள்வியினையும் எழுப்பியுள்ளது. அதோடு தற்போது லாக்டவுனில் இருந்து சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டு இருந்தாலும், இன்னும் பெரும்பாலான தொழில்கள் முடங்கியுள்ளன என்று தான் கூற வேண்டும். ஏனெனில் ஆள் பற்றாக்குறை, சரியான மூலப்பொருட்கள் கிடைக்காமை, சரியான மூலதனம் இன்மை, இப்படி அடுத்தடுத்த பிரச்சனைகளை தொழில்துறையானது மேற்கொண்டு வரும் நிலையில். சுத்திகரிப்பு மற்றும் கச்சா எண்ணெய் துறை மட்டும், சற்று வளர்ச்சி காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.