இந்தியாவின் பிரபல தொழிலதிபரான கெளதம் அதானி தற்போது உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தாலும் விரைவில் இரண்டாவது இடத்துக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமது மகனை ஏற்கனவே தனது தொழிலில் களம் இறக்கிய அதானி, தற்போது மேலும் சில பொறுப்புகளை அளித்துள்ளார்.
அதானியின் மகன் முக்கிய பொறுப்புகளை ஏற்க இருப்பதால் அவரது நிறுவனங்களின் வளர்ச்சி ஜெட் வேகத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதானி மகன் கரண்
உலகின் மூன்றாவது பெரிய பணக்காரரான கௌதம் அதானியின் மூத்த மகனான கரண் அதானி, அதானி குழுமத்தின் சிமென்ட் வணிகத்தை மேற்பார்வையிட உள்ளார். அதானி தனது சிமென்ட் வணிகத்தை வளர்ப்பதற்கு மூத்த நிர்வாகிகளை தனது மகனுக்கு வழிகாட்டியாக சேர்த்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
துறைமுகங்கள் மற்றும் சிமெண்ட்
35 வயதான கரண் தற்போது அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எகனாமிக் ஸோன் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். அவர் அதானி குழுமத்தின் துறைமுகங்கள் மற்றும் சிமென்ட் வணிகங்களுக்கு இடையே ஒருங்கிணைந்த தளவாட நிறுவனத்தை உருவாக்க ஒருங்கிணைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க மறுப்பு
அதானி மகன் கரண் நியமனம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கூறப்பட்டாலும் அதானி குழுமத்தின் பிரதிநிதி ஒருவர் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால் இந்திய சிமென்ட் தயாரிப்பு நிறுவனமான ஏசிசி லிமிடெட் மற்றும் ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, அதானியின் மகன் கரண் அதானியை தனது குழுவின் தலைவராக நியமித்துள்ளதாக கூறியுள்ளது.
வளர்ச்சி
அதானி குழுமம் கடந்த மே மாதம் சுவிட்சர்லாந்தின் ஹோல்சிம் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட் மற்றும் ஏசிசி லிமிடெட் ஆகியவற்றை வாங்கியதன் மூலம் இந்தியாவின் இரண்டாவது பெரிய சிமெண்ட் உற்பத்தியாளர் என்ற பெருமையை பெற்றது. இந்த நிலையில் கரண் பொருப்பேற்க இருப்பதால் இந்நிறுவனம் இன்னும் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.