உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் கார்களை விடுத்து எலக்ட்ரிக் கார்களைப் பயன்படுத்த துவங்கப்பட்டு உள்ள நிலையில், இந்தியாவில் மக்கள் மத்தியில் இது பெரிய அளவில் பிரபலம் ஆகவில்லை. இதற்கு முக்கியக் காரணம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எலக்ட்ரிக் கார்கள் அனைத்தும் அதிக விலையுடையதாக இருக்கிறது.
பொருளாதார ரீதியில் இந்தியாவில் நடுத்தர மக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம், அவர்கள் வாங்கும் அளவிற்குக் கார்கள் இருந்தால் நிச்சயம் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான சந்தை மிகப்பெரிய அளவில் உயர்ந்திருக்கும். டெஸ்லா நிறுவனம் உலகச் சந்தைகளைக் கைப்பற்ற வேகமாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் நிலையில் தற்போது இந்திய சந்தையின் பிரச்சனையைச் சரியான முறையில் புரிந்துகொண்ட மஹிந்திரா சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மஹிந்திரா
நாட்டின் முன்னணி கார் மற்றும் இரு சக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா இந்திய மக்களின் மத்தியில் எலக்ட்ரிக் கார் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், இதுவரை யாரும் இப்பிரிவில் பெரிய அளவிலான வர்த்தகத்தைப் படிக்காமல் இருக்கும் நிலையில் அதை வேகமாகப் பிடிக்க வேண்டும் எனத் திட்டமிட்டு நடுத்தர மக்களை மட்டுமே குறிவைத்து மலிவான விலையில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
எலக்ட்ரிக் கேயுவி கார்
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் அடுத்த மாதம் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் தனது புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி காரான எலக்ட்ரிக் கேயுவி கார்-ஐ அறிமுகம் செய்ய உள்ளது. அதுமட்டும் அல்லாமல் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டுக்குள் மக்களிடம் விற்பனைக்காகக் கொண்டு செல்லவும் மஹிந்திரா திட்டமிட்டு உள்ளது எனத் தெரிவித்தார்.
9 லட்சம் மட்டுமே
இதுபற்றி மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பவன் கோங்கா கூறுகையில், எங்களது புதிய எலக்ட்ரிக் கேயுவி கார் அடுத்த நிதியாண்டில் முதல் காலாண்டில் அறிமுகம் செய்ய உள்ளோம். இந்தக் கார் அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக வெறும் 9 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்தக் காரை சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டப்பட்டு உள்ளது.
அடுத்தடுத்த கார்கள்
இதுமட்டும் அல்லாமல் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவன எலக்ட்ரிக் கார் பிரிவில் கேயுவி கார் உடன் நிறுத்தாமல் எலக்ட்ரிக் atom காரை அடுத்த நிதியாண்டின் 3வது காலாண்டிலும், XUV300 ரகக் கார் 2021ஆம் ஆண்டு அறிமுகம் செய்யவும் மஹிந்திரா குழுமம் திட்டமிட்டுள்ளது.
டாடா முதல் ஹூண்டாய் வரை
மஹிந்திராவுக்குப் போட்டியாக இந்தியாவில் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனகளும் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய அதிரடி திட்டமிட்டு வருகிறது. ஆனால் யார் முதலில் சந்தை பிடிக்கிறார்கள் என்பது தான் போட்டி. வெல்லப்போவது யார் என்பதைக் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.