இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் எலக்ட்ரிக் கார் மற்றும் பைக் விற்பனை 2022ஆம் ஆண்டில் புதிய உச்சத்தைத் தொடும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
இதனால் புதிய கார்களை வாங்க திட்டமிடும் அனைவரும் எதிர்கால மாற்றங்களை உணர்ந்து கார் வாங்க வேண்டிய நிலை உருவாக்கியுள்ளது.
சுருக்கமாக 2022ஆம் ஆண்டின் எலக்ட்ரிக் கார் விற்பனை பெட்ரோல், டீசல் கார்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.
எலக்ட்ரிக் வாகனங்கள்
இந்தியாவில் கடந்த 15 வருடத்தில் மொத்தமாகவே 10 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு உள்ள நிலையில், இந்த ஆண்டு மட்டும் 10 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்படும் என மின்சார வாகன உற்பத்தியாளர் சங்கம் (SMEV) கணித்துள்ளது.
10 லட்சம் வாகனங்கள்
ஒரே வருடத்தில் 10 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்வது என்பது பெரிய இலக்காகத் தெரிந்தாலும், கடந்த ஆண்டு எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அளவை பார்க்கும் போது இது சாத்தியம் என்று தான் தோன்றுகிறது. 2020ல் 1,00,736 எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், 2021ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 2,33,971 ஆக உயர்ந்துள்ளது.
புதிய பிரிவு
இதுமட்டும் அல்லாமல் தற்போது எலக்ட்ரிக் கார், எலக்ட்ரிக் 3 சக்கர வாகனங்கள், எலக்ட்ரிக் வர்த்தக வாகனங்களும் விற்பனை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதேவேளையில் இந்தியாவில் பல மாநிலங்களில் எலக்ட்ரிக் பஸ் பயன்படுத்தும் திட்டமும் அறிவிக்கப்பட்டு உள்ளதால் விரைவில் எலக்ட்ரிக் பஸ் உற்பத்தியும், விற்பனையும் அதிகரிக்கும்.
2022 டார்கெட்
இதனால் கட்டாயம் 2022ஆம் ஆண்டில் 10 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்களைக் கட்டாயம் விற்பனை செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மத்திய அரசும் தனது நெட் ஜீரோ இலக்கை அடைய வேண்டும் என்பதற்காகப் பெட்ரோல், டீசல் கார்களின் உற்பத்தியும், பயன்பாட்டையும் குறைக்க வேண்டும் என்பதை முக்கியக் குறிக்கோள் ஆக உள்ளது.
ஓலா, டிவிஎஸ், மாருதி சுசூகி, டாடா, மஹிந்திரா
இதனால் எலக்ட்ரிக் வாகனங்களுக்குக் கூடுதலான சலுகைகளை மத்திய மாநில அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஓலா, டிவிஎஸ், மாருதி சுசூகி, டாடா, மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகன தயாரிப்புக்கு அதிகப்படியான முதலீட்டைச் செய்து உற்பத்தியைத் துவங்கியுள்ளது, இதனால் விற்பனையும் சூடுப்பிடத்துள்ளது.