உலகின் மிகப்பெரிய பணக்காரர்களான எலான் மஸ்க் மற்றும் ஜெப் பெசோஸ் இருவரும் ஓரே வருடத்தில் சுமார் 20 பில்லியன் டாலர் அதாவது 1,50,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம் அமெரிக்கப் பங்குச்சந்தையில் மிகப்பெரிய பணப்புழக்கம் உருவாக்கியுள்ளது.
இந்தப் பங்கு விற்பனைக்குப் பின் இருக்கும் காரணம் என்ன..? எலான் மஸ்க் மற்றும் ஜெப் பெசோஸ் மட்டும் அல்லாமல் மைக்ரோசாப்ட் சத்ய நாடெல்லா உட்படப் பலர் தங்களது நிறுவன பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
டெஸ்லா எலான் மஸ்க்
உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் வரி செலுத்துவதற்கும், புதிய முதலீடுகளைச் செய்வதற்கும் தன்னிடம் இருந்த மொத்த டெஸ்லா பங்கு இருப்பில் 10 சதவீதத்தை விற்பனை செய்ய முடிவு செய்தார்.
எலான் மஸ்க்
இதன் அடிப்படையில் எலான் மஸ்க் பல பிரிவுகளாக டெஸ்லா பங்குகளை விற்பனை செய்தார். 2021ல் மட்டும் சுமார் 9.9 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளார். இது டெஸ்லா முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவிலான புழக்கத்தை உருவாக்கியுள்ளது.
அமேசான் ஜெப் பெசோஸ்
இதேபோல் அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் பெசோஸ் சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளைச் சிறிது சிறிதாக விற்பனை செய்து, பல புதிய நிறுவனத்திற்கும், பிற வர்த்தகத்திலும் முதலீடு செய்துள்ளார்.
மைக்ரோசாப்ட் சத்ய நாடெல்லா
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ-வான சத்ய நாடெல்லா தன்னிடம் இருந்த மைக்ரோசாப்ட் பங்கு இருப்பில் சுமார் 50 சதவீத பங்குகளை நவம்பர் 22 முதல் 24 வரையில் விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் சத்ய நாடெல்லா 8,39,000 பங்குகளைச் சராசரியாக 342 டாலருக்கு விற்பனை செய்து மொத்தம் 287 மில்லியன் டாலர் அளவிலான நிதியை திரட்டியுள்ளார்.
வால்மார்ட், ஆல்பபெட், பேஸ்புக்
சத்ய நாடெல்லா-வை தொடர்ந்து வால்மார்ட் நிறுவனத்தின் வால்டன் குடும்பம் 6.2 பில்லியன் டாலர் பங்குகளையும், கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களான லேரி பேஜ் மற்றும் செர்கி பிரின் ஆகியோர் தலா 1.5 பில்லியன் டாலர் ஆல்பபெட் பங்ககுளையும், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் 4.5 பில்லியன் டாலர் மதிப்பிலான மெட்டா பங்குகளையும் விற்பனை செய்துள்ளார்.
வாஷிங்டன் மாநில அரசு
அமெரிக்காவில் 2,50,000 டாலருக்கு அதிக மதிப்புடைய பங்குகளை விற்பனை செய்யும் போது long-term capital gains tax ஆகச் சுமார் 7 சதவீத வரியை வருகிற ஜனவரி 1, 2022 முதல் வாஷிங்டன் மாநில அரசு விதிக்க உள்ளது. இது அமெரிக்காவின் வாஷிங்டன்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் பொருந்தும்.
வரித் தாக்கம்
இந்த வரி விதிப்பால் புதிதாகப் புதிதாக நிதி திரட்ட பங்குகளை விற்பனை செய்ய வேண்டுமெனில் ஜனவரி 1க்குப் பின் விற்பனை செய்யும் போது கூடுதாலாக வரியை செலுத்த வேண்டும். எனவே முன்கூட்டியே அனைவரும் பங்குகளை விற்பனை செய்து முதலீட்டைத் திரட்டியுள்ளனர். இதைப் பல நிறுவனத் தலைவர்கள் பின்பற்றியுள்ளதால் அமெரிக்கப் பங்குச்சந்தையில் அதிகப்படியான வர்த்தகம் உருவாகியுள்ளது.