உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க போவதாக அறிவித்த நிலையில் திடீரென அந்த முடிவிலிருந்து பின்வாங்கினார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்க மறுத்ததை அடுத்து ட்விட்டர் நிறுவனம் இது குறித்து வழக்கு தொடர்ந்தது.
ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக எலான் மஸ்க் வழக்கு தொடர்ந்த வழக்கில் இந்திய அரசை தனது தரப்பில் நீதிமன்றத்தில் மேற்கோள்காட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எலான் மஸ்க் - ட்விட்டர்
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் ட்விட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குவதாக ஒப்பந்தம் செய்தார். இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் திடீரென ட்விட்டரில் போலி கணக்குகள் அதிகமாக இருப்பதாக கூறி ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிட்டார்.
வழக்கு
இதனையடுத்து ட்விட்டர் நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் எலான் மஸ்க் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்துக்கு எதிராக எலான் மஸ்க் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவர் தனது தரப்பு வாதங்களையும் குறிப்பிட்டபோது இந்தியா குறித்தும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் வழக்கில் இந்தியா!
2021 ஆம் ஆண்டு இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யும் பதிவுகளை விசாரிக்கும் வகையில் புதிய விதிகளை கொண்டு வந்ததாகவும் அதன் பேரில் ட்விட்டர் நிறுவனம் இந்திய சட்டங்களை மதிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டதாகவும் எலான் மஸ்க் தரப்பில் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனம் செயல்படும் நாடுகளில் அந்தந்த நாட்டின் விதிகளுக்கு உரிய வகையில் செயல்பட வேண்டிய நிலை உள்ளதாகவும் எலான் மஸ்க் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
எலான் மஸ்க் கூறிய காரணம்
ட்விட்டர் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக தேவையில்லாத வழக்குகளை தொடுத்துள்ளது என்றும், அமெரிக்கா, ஜப்பானுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய சமூக வலைத்தள சந்தையான இந்தியாவை ட்விட்டர் பகைத்து கொண்டதாகவும், இது ட்விட்டர் சந்தையின் பின்னடைவு என்றும், இது தங்களுடைய இணைப்பு ஒப்பந்தத்தின் மீறலாகும்' என்றும் எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கும் முடிவில் இருந்து பின்வாங்கியதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் மறுப்பு
ஆனால் இந்த குற்றச்சாட்டை ட்விட்டர் நிறுவனம் மறுத்துள்ளது. எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கும் முடிவை கைவிட்டதால் இவ்வாறு பேசுகிறார் என்றும், சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்கும் விவகாரத்தில் இந்திய அரசின் உத்தரவுக்கு எதிராக தங்கள் நிறுவனம் அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், இந்த வழக்கு விசாரணையில் உள்ளது என்றும் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications