ட்விட்டரில் பரப்பரபான ட்ரெண்டிங் செய்திகளை பார்க்கலாம். ஆனால் ட்விட்டரே பரபரப்பான செய்தியாக சமீபத்திய வாரங்களாகவே மாறியுள்ளது. எந்த நேரத்தில் எந்த அறிவிப்பு வரும்? இனி நிறுவனத்தில் பணிபுரிவோமா? மாட்டோமா? என்ன நடக்குமோ? என்ற பதற்றமான நிலையே ஊழியர்கள் மத்தியில் இருந்து வருகின்றது.
இதே பயனர்கள் மத்தியில் ப்ளூ டிக் குறித்தான திட்டம் வருமா? வராதா? என்ற நிலையே இருந்து வருகின்றது. இப்படி பல பரபரப்பான விஷயங்கள் ட்விட்டரில் இருந்து வெளியாகிய வண்ணம் உள்ளன. அந்த வகையில் இன்று என்ன அறிவிப்பு வந்துள்ளது வாருங்கள் பார்க்கலாம்.
அதிரடியான பல மாற்றங்கள்
ட்விட்டரை வாங்கிய கையோடு பல அதிரடியான மாற்றங்களை செய்து வரும் நிலையில், பல செலவு குறைப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டரில் இதுபோன்ற மாற்றங்கள் நிறைய வரும். அவை சரியாக ட்விட்டருக்கு பொருந்தினால் அது தொடரும். இல்லையேல் அது நீக்கப்படும் என்றும் கூறியிருந்தார். எலான் மஸ்கின் அறிவிப்பினை போல ஒவ்வொரு அறிவிப்பாக வந்து கொண்டுள்ளது.
சலுகைகள் நிறுத்தம்
ஆரம்பத்தில் ட்விட்டரில் ப்ளூ டிக்கிற்கு கட்டணம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் மேற்கொண்டு செலவினங்களை குறைக்கும் விதமாக ஊழியர்களுக்கு கொடுத்து வந்த சில சலுகைகளை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
என்னென்ன சலுகைகள் நிறுத்தம்
குறிப்பாக வீட்டில் பயன்படுத்தப்படும் இணையசேவை, வெல்னஸ், உற்பத்திறன், பயிற்சி மற்றும் மேம்பாடு, அவுட்ஸ்கூல்கள், டே கேர், காலாண்டு குழு செயல்பாடுகள் உள்ளிட்ட பல சலுகைகளை குறைத்துள்ளது.
இந்த சலுகைகள் காலபோக்கில் மறு ஆய்வு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் நிதி நிலைமை மேம்படும்போது இது குறித்து ஆலோசிக்கப்படலாம் என்றும் மஸ்க் கூறியுள்ளார்.
புதிய அம்சங்கள் சேவை
மேலும் ட்விட்டரில் இன்னும் புதிய முக்கிய அம்சங்கள் சேர்க்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். குறிப்பாக வீடியோ மற்றும் வாய்ஸ் காலிங் சேவையினை அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். பயனர்கள் கவலைப்படாமல் எங்களை தொடர்பு கொள்ள நாங்கள் விரும்புகிறோம் என எலான் மஸ்க் கூறியுள்ளார்.
பயனர்களுக்கு பாதுகாப்பு
எல்லாவற்றுக்கும் மேலாக பயனர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அவர்களின் தரவுகள் பாதுகாக்கப்படும். குறிப்பாக அவர்களின் தனியுரிமை பாதுகாக்கப்படும் என அறிவித்துள்ளார்.
ட்விட்டரில் மூன்றில் இருமடங்கு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணி நீக்கம் குறித்து வெளியான நிலையில், பணியமர்த்தலை மீண்டும் தொடங்கியுள்ளது.
பணியமர்த்தல் திட்டம்
தற்போது ட்விட்டர் பொறியாளர்கள் மற்றும் விற்பனை பிரிவுகளில் பணியமர்த்தல் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் சிலரை பணிக்கு அழைத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தாக்கு பிடிப்பார்களா?
ட்விட்டரில் இன்னும் என்ன மாதிரியான மாற்றங்களும், குழப்பங்களும் வரப்போகின்றனவோ? குறிப்பாக எலான் மஸ்க் கையகப்படுத்தியதில் இருந்து பல மாற்றங்கள் வந்து கொண்டுள்ளன. பல்வேறு சர்ச்சைகள் எழுந்து கொண்டுள்ளன. ட்விட்டர் 2.0வில் இன்னும் ஊழியர்கள் அனுபவிக்க வேண்டியது இன்னும் என்னவெல்லாம் இருக்கிறதோ? ஏற்கனவே எலான் மஸ்கின் நடவடிக்கை பிடிக்காமல் தாங்களாகவே ராஜினாமா செய்து வரும் ஊழியர்கள் இனியும், எலான் மஸ்கின் ஆட்டததை தாக்குபிடிப்பார்களா? பொறுத்திருந்தான் பார்ப்போமே.