உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் செவ்வாய்க்கிழமை அன்று தனது செல்வத்தில் 22.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்தார். இது இந்திய மதிப்புக்கு சுமார் ரூ.1,93,394 கோடியாகும். அவருடைய செல்வத்திலிருந்து இவ்வளவு பெரிய இழப்பு ஏற்படுவது இது 4-வது முறையாகும். இதற்கு முன்னரும் இதே போன்ற இழப்புகளை எலான் மஸ்க் சந்தித்திருக்கிறார். மஸ்கின் செல்வத்தில் பாதிக்கும் மேலான சொத்துக்கள் அவருடைய டெஸ்லா இன்க் நிறுவனத்தின் பங்குகளில் இருந்து வருகிறது.
இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து எலான் மஸ்க் 52 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர மதிப்பை இழந்துள்ளார். ஆனாலும் அவர்தான் இன்னும் உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கிறார். தற்போது எலான் மஸ்க்-கின் நிகர மதிப்பு 358 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது இந்திய மதிப்புக்கு ரூ.3117830 கோடி என்று ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவித்துள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் பங்கு விலை 8.4 சதவீதம் சரிந்ததை தொடர்ந்து, எலான் மஸ்க் இந்த இழப்பை சந்தித்துள்ளார். நவம்பர் 7-ஆம் தேதிக்கு பிறகு முதல் முறையாக டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் கீழ் சென்றது.
2024-ஆம் ஆண்டு வெளியான அறிக்கையின்படி எலான் மஸ்க், டெஸ்லா நிறுவன பங்குகளில் 13 சதவீதத்தை வைத்திருக்கிறார். டொனால்ட் ட்ரம்ப் அதிபராக பதவியேற்றதிலிருந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். சமீபத்தில் ரெசிபுராக்கள் வரிமுறையை கொண்டு வந்தார். இதனால் பங்குச்சந்தையில் தடுமாற்றம் தொடர்ந்தது. செவ்வாய்க்கிழமை அன்று டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சரிந்தாலும் ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின்படி நவம்பர் 2024-ஆம் ஆண்டில் டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பு இருந்ததைவிட தற்போது 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகமாக நிகர மதிப்பை கொண்டிருக்கிறார். டெஸ்லா நிறுவனம் மின்சார வாகனங்கள், சோலார் பேட்டரிகள் ஆகியவற்றை விற்பனை செய்கிறது. இதற்கு முன்னர் Twitter என்று அழைக்கப்பட்ட சமூக ஊடக தளமான X-ஐயும் இவர் வைத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications