உலகளவில் டெக் ஊழியர்களைப் புரட்டிப்போட்ட விஷயமாக இருக்கும் டிவிட்டர் நிறுவனத்தின் 50 சதவீத ஊழியர்கள் பணிநீக்கத்தைத் தொடர்ந்து எலான் மஸ்க் மீண்டும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது கூடுதல் அதிர்ச்சியை அளித்துள்ளது.
எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றிய பின்பு அறிவிக்கப்பட்ட மிக முக்கியமான திட்டமாக இருந்தது 8 டாலர் கட்டணத்தில் வெரிபிகேஷன் சேவையை அளித்தது தான், ஆனால் இத்திட்டத்தால் பல போலிகள் உருவாகிப் பல முன்னணி நிறுவனங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய காரணத்தால் எலான் மஸ்க் இத்திட்டத்தை மொத்தமாகத் திரும்பப் பெற்றார்.
இதனால் பெரும் தோல்வியைச் சந்தித்த எலான் மஸ்க் செலவுகளைக் குறைக்கவும், நிறுவனத்தைத் திவால் ஆவதில் இருந்து காப்பாற்றக் கூடுதலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளார்.
எலான் மஸ்க்
எலான் மஸ்க் தலைமையிலான டிவிட்டர் நிறுவனத்தில் முதல் நாளில் இருந்தே அதிகப்படியான மாற்றங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், செலவுகளைக் குறைக்க வேண்டும் என்ற ஒற்றைக் காரணத்திற்காக மட்டுமே எலான் மஸ்க் நிர்வாகம் 50 சதவீத டிவிட்டர் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது.
இந்தியா, ஆப்பிரிக்கா
இந்தப் பணி நீக்கத்தின் மூலம் 200 ஊழியர்கள் பணியாற்றிய இந்திய டிவிட்டர் அலுவலகத்தில் தற்போது வெறும் 20-25 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதேபோல் ஆப்பிரிக்காவில் முதல் அலுவலகத்தைத் திறந்து 3 நாளில் ஒரு ஊழியரைத் தவிர அனைத்து ஊழியர்களையும் பணிநீக்கம் செய்து டிசம்பர் மாதம் இறுதி வேலை நாள் அளிக்கப்பட்டு உள்ளது.
4400 ஒப்பந்த ஊழியர்கள்
இதன் மூலம் ஆப்பிரிக்க அலுவலகம் தற்போது ஒரேயொரு ஊழியரை வைத்து இயங்கி வருகிறது. இந்த நிலையில் எலான் மஸ்க் ஏற்கனவே 3800 டிவிட்டர் ஊழியர்களைத் தனது 50 சதவீத பணிநீக்கத்தில் வெளியேற்றிய நிலையில், தற்போது 4400 ஒப்பந்த ஊழியர்களும் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பணிநீக்க அறிவிப்பு
Platformer மற்றும் Axios ஆகிய இரு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தரவுகள் படி டிவிட்டர் தற்போது ஒப்பந்த ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கி வருவதாகத் தெரிவித்துள்ளது. டிவிட்டர் நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் அதற்கான பணிநீக்க அறிவிப்பு வெளியில் வரவில்லை.
ஸ்லாக் மற்றும் ஈமெயில்
ஆனால் ஒப்பந்த ஊழியர்களுக்கு டிவிட்டர் உடனான ஸ்லாக் மற்றும் ஈமெயில் தொடர்பு, ஆக்சிஸ் ஆகியவை நீக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து டிவிட்டர் மேனேஜர்கள் தங்களுக்குக் கீழ் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் மறைவதை உணர்ந்துள்ளனர். இதனால் இந்தப் பணிநீக்க அறிவிப்பு அணி வாயிலாக மேனேஜரிடம் இருந்து வரவில்லை.
ஒப்பந்த ஊழியர்கள்
எலான் மஸ்க் மற்றும் டிவிட்டர் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகத்தின் நேரடி உத்தரவின் பெயரில் இந்த 4400 ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது. மேலும் இந்தப் பணிநீக்கம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் தான் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிவிட்டர் திவால்..?
டிவிட்டர் நிறுவனத்தை வைத்து பல பெரிய திட்டங்களைத் தீட்டி வரும் எலான் மஸ்க்-கிற்கு இந்த 8 டாலர் வெரிபிகேஷன் திட்டத்தில் ஏற்பட்ட தோல்வி பெரும் தடையாக மாறியுள்ளது. ஏற்கனவே டிவிட்டர் விரைவில் அதிகளவிலான வருமானத்தை ஈர்க்கவில்லை எனில் திவாலாகி விடும் என எலான் மஸ்க் டிவிட்டர் ஊழியர்கள் உடனான முதல் கூட்டத்தில் பேசினார்.