இந்தியாவில் 5ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் அறிமுகம் செய்து பெரும் மாற்றத்தை டெலிகாம் சேவையில் செய்ய உள்ள நிலையில், பிராட்பேண்ட் சேவையிலும் முக்கியமான மாற்றங்கள் நடக்க உள்ளது.
குறிப்பாகப் பிராட்பேண்ட் சேவை வளர்ச்சியில் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் பல புதிய முயற்சிகளைச் செய்து வரும் நிலையில், இந்தியாவில் செயற்கைக்கோள் வாயிலாகப் பிராட்பேண்ட் இணைப்பு வழங்கும் முயற்சிகளை ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் எடுத்துள்ள வேளையில்..
இத்துறையில் சிறந்து விளங்கும் எலான் மஸ்க்-ன் SpaceX நிறுவனம் 2வது முறையாகச் செயற்கைக்கோள் வாயிலாக இண்டர்நெட் சேவை அளிக்க விண்ணப்பம் செய்துள்ளது. இது ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்குப் பெரும் போட்டியாக இருக்கும்.
செயற்கைக்கோள்
பூமிக்கு அருகில் செயற்கைக்கோள்களை (LEO satellites) வைத்து அதன் மூலம் அதிவேக இண்டர்நெட் சேவையை அளிப்பது தான் இந்தச் செயற்கைக்கோள் வாயிலாகப் பிராட்பேண்ட் சேவை அளிக்கும் திட்டம். இத்தகையைச் சேவையை முதல் முறையாக அறிமுகம் செய்தது ஸ்பேஸ்எக்ஸ் தான்.
ஸ்பேஸ்எக்ஸ்
உலகில் பல நாடுகளில் இந்தச் சேவையை ஸ்பேஸ்எக்ஸ் அளித்து வரும் நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பல ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக ரஷ்யா போர் தாக்குதல் காரணமாகப் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டில் ஸ்பேஸ்எக்ஸ் தனது செயற்கைக்கோள் வாயிலாகப் பிராட்பேண்ட் சேவையான ஸ்டார்லிங்க் சேவையை அளித்து வருகிறது.
அதிவேக இண்டர்நெட்
இந்தச் சேவை மூலம் காடு, மலை என அனைத்து பகுதிகளிலும் வீட்டில் கிடைக்கும் அதிவேக இண்டர்நெட் சேவையைப் போலவே பெற முடியும் என்பது தான் இச்சேவையின் சிறப்பு. இதனாலேயே பலர் இந்தச் சேவை இந்தியா, சீனாவில் வர வேண்டும் என விரும்புகின்றனர்.
எலான் மஸ்க்
எலான் மஸ்க் தனது முதல் முயற்சியில் ஸ்டார்லிங்க் சேவைக்கான கருவிகளை இந்தியாவில் தயாரித்து, இந்தியா மற்றும் சீனாவில் அறிமுகம் செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்தது. ஆனால் கடைசியில் தோல்வி அடைந்தது மட்டும் அல்லாமல் மத்திய அரசிடம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது ஸ்பேஸ்எக்ஸ்.
லைசென்ஸ்
இந்தியாவை விட்டு ஸ்பேஸ்எக்ஸ் மொத்தமாக வெளியேறுகிறது எனப் பேச்சு அடிப்பட்டு வந்த நிலையில் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்குப் பெரும் போட்டியாக 2வது முறையாக டெலிகாம் அமைச்சகத்திடம் global mobile personal communication by satellite services (GMPCS) சேவை அளிப்பதற்கான உரிமத்தை பெற அதிகாரப்பூர்வமாக விண்ணப்பம் செய்துள்ளது.